வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் இந்த இரண்டு கல் சந்து இருக்கிறது. பெரிய வாகனங்கள் செல்லமுடியாதவாறு சந்து ஆரம்பத்தில் 4 அடி நீளமுள்ள கருங்கற்கள் இரண்டை நடுவில் 2 ஆட்கள் போகும் அளவு இடம் விட்டு நட்டு வைத்துஇருப்பார்கள். அது ஒரு குட்டி சந்து மொத்தமாக 6 அடி அகலம் இருக்கும், அதில் 1.5 அடிக்கு கால்வாய் இருக்கும், அந்த கால்வாய் கோலியனூர் வாய்க்காலில் சென்று விழும். (நம் சென்னை கூவம் போல இந்த கோலியனூர் வாய்க்கால் விழுப்புரம் பூராவும் சுற்றி சுற்றி வரும், எங்கு தொடக்கம் எங்கு முடிவு என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை)

சமீபத்தில் விழுப்புரம் சென்ற போது என் பிள்ளைக்கு என் தோழிகள் வீடு, சின்ன கடைத்தெரு, போஸ்ட் ஆபிஸ் இருந்த வீடு, பெரிய அண்ணாவுடைய ஜிம், நான் காசு சேர்த்து sketch pen வாங்கும் விஜய புக் ஹவுஸ், தனித்தனியாக வாங்குவதால் ஒரு பேணாவிற்கு 25 பைசா அதிகமாக வைக்கும் அந்த விஜயா புக் ஹவுஸ் விற்பனையாளர், நடராஜ முதலித்தெரு, பாத்திரங்கள் ஓட்டை அடைக்கும் குட்டி சந்து கடை, 1-3 வகுப்பு வரை நான் படித்த பிரெம்ஜி பள்ளி, என் பெரிய அண்ணன் அலுக்காமல் சென்று அரட்டை அடிக்கும் அவருடைய பெண் தோழிகளின் வீடுகள், இந்த இரண்டு கல் சந்து என்று சொல்லிக்கொண்டே வரும் போது பார்த்தால் அங்கே அந்த இரண்டு கற்கலையும் காணவில்லை. வெறும் சந்து தான் இருக்கிறது.

இப்போது ஆட்டோ கூட செல்லலாம் போல் இருந்தது. சிமெண்டு ரோடு போடப்பட்டு அழகாக இருந்தது.

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இந்த இரண்டு கல் சந்துவழியாக தான் செல்லுவேன், பிரேம்ஜி பள்ளிக்கு போக வேறு வழியும் இல்லை, அப்படி போவதானால் வேறு வழியாக சுற்றிக்கொண்டு போகவேண்டும். ஆயா எனக்கு நீலக் கல் நடுவில் வைத்த குட்டி கம்மல் தங்கத்தில் போட்டு இருந்தார்கள். கால் பவுன் இருக்கும். அந்த சந்தின் வழியாக ஒரு நாள் மதியம் நான் வந்துக்கொண்டு இருந்த போது சைக்கிலில் வந்த ஒரு அண்ணன் என்னை பார்த்தவுடன் இறங்கி என்னிடம் பேச்சுக்கொடுத்தவாறு நடந்து வந்தார்கள். நானும் அவருடன் பேசியவாறே வந்தேன். அப்போது அந்த அண்ணன் "பாப்பா, உன் நீலக் கல் கம்மல் அழகாக இருக்கு, கழட்டி தரியா நான் பார்த்துட்டு திருப்பி தருகிறேன் " என்றார்கள். நானும் "சரி அண்ணா ஆனா எனக்கு கழட்ட தெரியாதே, நீங்களே கழட்டிக்கோங்க..." என்று காதைக்காட்ட, அண்ணன் பொறுமையாக கழட்டி, அவருடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, வேகமாக சைக்கிலில் ஏறி சென்றுவிட்டார்கள். :(

"..........??????!! என்ன அண்ணன் இவ்வளவு வேகமாக போறாங்க..? திருப்பி வந்து கம்மலை தருவாங்களா? மாட்டாங்களா? சரி கண்டிப்பாக வீட்டில் கொண்டுவந்து கொடுப்பார்கள்" இப்படி நானே எனக்குள் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.

வீட்டில் - ஆயா காதை பார்த்துவிட்டு -
"பாப்பா' காது ஏன் மொட்டையா இருக்கு, கம்மல் எங்க?"

"ஆயா, அந்த அண்ணன் அழகா இருக்குன்னு கழட்டி எடுத்துட்டு போயிட்டாங்க.. .. "

"எந்த அண்ணன்?"

"....................??????...............எந்த அண்ணன்..?? அதான் அந்த இரண்டு கல் சந்தில் நின்னு பேசினாங்களே, அவங்க"

"சரி யாருன்னு தெரியுமா, நம்ம வீட்டுக்கு தெரிஞ்சவங்களா?"

"இல்லையே நான் அவங்களை பார்த்ததே இல்லையே.. ஆனா நல்ல அண்ணன் ஆயா.. :)))))))))) , வீட்டுக்கு வந்து கம்மலை கொடுப்பாங்க..."

"அட பேக்கு பெண்ணே...!! எவனோ காதுல இருக்கறதை லவுட்டிக்கிட்டு போயிட்டான்...நீயும் நின்னு பொறுமையா கழட்டி கொடுத்துட்டு வந்து இருக்க... சரி இனிமே தெரியாதவங்க கிட்ட பேசக்கூடாது, சந்துல யாரும் இல்லன்னா ஓடி வந்துடனும், அப்பா அம்மா அங்க நிக்கறாங்க வா' னு கூப்பிடுவாங்க போகக்கூடாது, கூட்டிட்டு போயி கண்ணை நோண்டி பிச்சை எடுக்க விட்டுடுவாங்க..., ஜாக்கறதையா இருக்கனும்.."

"ஆயா அம்மா தான் இங்க இல்லையே அம்மா கூப்பிட்டாங்கன்னு சொன்னா நான் எப்படி போவேன்..?! போகமாட்டேன்.. நீ பயப்படாதே... கண்ணை எப்படி நோண்டுவாங்க? வலிக்குமே?

"ஆமா ரொம்ப வலிக்கும், கம்பி வச்சி நோண்டுவாங்க... அதனாலத்தான் தெரியாதவங்க கிட்ட பேசக்கூடாது..."

" நீ கூப்பிட்டேன்னு சொன்னாலும் போகக்கூடாதா? நீ என்னை கூப்பிடமாட்டியா? "

"ஆமா நான் உன்னை கூப்பிடவே மாட்டேன்...நானே வருவேன் இல்லன்னா வீட்டுல இருந்து யாராவது வருவாங்க.. என்ன ஆனாலும் புது மனஷங்க கிட்ட நின்னு எல்லாம் பேசிக்கிட்டு இருக்க கூடாது........... ..கெஜா.. இங்க பாத்தியா......?!! உன் பொண்ணு எவ்வளவு சமத்துன்னு...வா வா.....!! வந்து பாரு..கம்மலை ஒழிச்சிட்டு வந்து நிக்குது...... :) "
===================

நீலக்கல் போயி இப்போது சிகப்பு கல் கம்மல் போட்டு விட்டார்கள். ஒரு ஞாயிற்று கிழமை தலையில் எண்ணெய் தேய்த்து விட்டு, குளிக்க தயாராகிக்கொண்டு இருந்தேன்...

ஆயா "பாப்பா கம்மலை கழட்டிடு..."

"போ ஆயா..அது வலிக்குது ..."

"சரி வா.. திருகு சரியா இருக்கு..பாரு.."

ஆயா சமையல் அறையிலிருந்து சொன்னதால் நான் திருகை சரி செய்கிறேனா என்று பார்க்கவில்லை, நானும் சரி செய்யாமலேயே விளையாட்டு தனமாக " சரி பண்ணிட்டேன்..சீக்கிரம் குளிக்க ஊத்து வா..கண்ணு எரியுது.." என்றேன்.

குளித்து முடித்து வந்து பார்த்தால் ஒரு பக்கம் கம்மல் மிஸ்ஸிங்.. திருகு சரி இல்லாமல் கழண்டு தண்ணீரோடு அடித்து கொண்டு சென்று விட்டது போல. அன்றைக்கு பெரிய அண்ணன், சின்ன அண்ணன், அப்பா, தாத்தா என்று எல்லோரும் சாக்கடையை நோண்டி பார்த்துவிட்டார்கள், நாற்றம் கிளம்பியதே அன்றி சிகப்புகல் கம்மல் கிடைக்கவே இல்லை.

அன்றைக்கு குடும்பமே உட்கார்ந்து பேசி "பாப்பாவிற்கு இனி தங்க கம்மல் இல்லை" என்று முடிவு செய்தது. எனக்கு தெரிந்து 10ஆம் வகுப்பு படிக்கும் போது சின்ன அண்ணன் ஒரு அரைபவுன் தொங்கும் கம்மல் வாங்கி தந்தார்கள், அதையும் ஆயா உள்ளே வைத்தார்களே அன்றி எனக்கு போட்டுக்கொள்ள கொடுக்கவில்லை.

திருமணம் நிச்சயம் ஆன பிறகு தான் தங்ககம்மல் போட எனக்கு அனுமதி கிடைத்தது. அதுவும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து திடீரென்று யாராவது விசிட் அடிப்பார்கள், பெண் ஒரு தங்க கம்மல் கூட போட்டு இல்லை என்று நினைப்பார்கள் என்று போட்டு விட்டார்கள்.

அணில் குட்டி அனிதா:- இப்ப ஏதாச்சும் தொலச்சி இருக்கீங்களா? ஏன் கேக்கறேன்னா வூட்டுகாரரும் இப்படி ஒரு முடிவு செய்வாரு இல்லையா? ஆனா என்ன "பாப்பா'க்கு பதிலா இப்ப "பீப்பாவிற்கு இனி தங்க கம்மல் இல்லை" ன்னு சொல்லுவாரு.. நீங்கலும் தலைப்பை பீப்பாவிற்குன்னு மாத்தி ஒரு பதிவு போடலாம்...ஹி ஹி..அதான் வித்தியாசம்....

கவி வேணாம்....முறைக்காதீங்க... பீப்பாவை பீப்பான்னுத்தான் சொல்ல முடியும், பாப்பான்னா சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்க பாக்கலாம்...... ஹி ஹி...!! :)

பீட்டர் தாத்ஸ் :- “ A baby will make love stronger, days shorter, nights longer, bankroll smaller, home happier, clothes shabbier, the past forgotten, and the future worth living for