நாகவல்லிக்கும் எனக்கும் ஏதோ எப்பவும் ஒரு தொடர்பு பந்தம் இருந்துக்கிட்டே இருக்கு. அடிக்கடி பாம்புகளை பார்ப்பது, உள்ளே நடுங்கினாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தைரியமாக கண்ணோடு கண் பார்த்து பேசுவது போன்றவை நடக்கும்.

கேரளாவில் இருக்கும் போது இது நடந்தது.. ஆயாவிற்கு போன் செய்து சொல்லுவேன். பெருங்காயம் கரைத்து வீட்டு வாசல் படிகளில் தெளித்துவை, அந்த வாசத்திற்கு பாம்பு வராது என்றார். பக்கத்துவீட்டு ஆன்ட்டியும் அதேயே சொன்னார். அதை எல்லாம் செய்தும் எனக்கும் அதுக்கும் உள்ள பந்தம் போகவில்லை.

கேரளாவில் பொதுவாக தோட்டங்களில் புல் செடிகள் எல்லாம் முழங்கால் அளவிற்கு வளர்ந்து இருக்கும். அதை ஆள் வைத்து 2-3 மாதங்களுக்கு ஒருமுறை செதுக்கி எடுக்கவேண்டும். இல்லையென்றால் இப்படி பாம்புகளுடன் நாமும் நம்முடன் பாம்புகளுமாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட அனுபவம் இல்லாத புது இடம், சொந்த ஊரில் நடப்பது போலவே அங்கேயும் கொடியில் காயவைத்த துணிகளை எடுக்க தோட்டதிற்கு சென்றேன். தோட்டம் வீட்டை விட 5 படிகள் மேல் ஏறி செல்ல வேண்டும். என் ரவுண்டு குட்டி (என் பையன், இப்படி நிறைய செல்லமாக அவனை நான் அழைப்பதுண்டு) என் பின்னாடியே வந்தான். அவனுக்கு என்னுடைய சுடிதாரை, புடவையை பிடித்துக்கொண்டு நடக்கவில்லை என்றால் தூக்கம் வராது. அதே போலவே நான் நடக்க என் பின்னால் அவனும்.. துணி எடுத்துக்கொண்டு இருக்கும் போது மிக மெதுவாக ஒரு சத்தம். ஸ்.ஸ்...ஸ்.... இடது கையில் துணி, எனக்கு பின்னால் இருந்த ரவுண்டு குட்டியை வலது கையால் என்னுடன் சேர்த்து இறுக்கி அனைத்தேன்...

"குட்டி சத்தம் போடாம அப்படியே அம்மாவோட சேர்ந்து நில்லு...காலை நகர்த்தாதே " என்றேன்.

"ஏம்மா..?!! "

"பாம்பு இருக்குடா..எங்கன்னு தெரியல சத்தம் மட்டும் வருது..அப்படியே ச்டாச்சு மாதிரி நிக்கனும் சரியா...."

"................."

நின்ற இடத்திலிருந்து சுற்றி பார்வையை செலுத்தினேன்... என் கால்களூக்கு ஒரு முழம் இடைவெளியில் இடது கை பக்கம் ஒரு வல்லி தலையை தூக்கி நின்று (படம் எடுத்து) என்னை போட்டுத்தள்ள காத்திருந்தது.

பார்த்த அடுத்த வினாடி உடம்பு ஆடியது..என் உடம்பின் ஆட்டம் ரவுண்டு குட்டிக்கும் தெரிந்துவிட்டது போல.. எட்டி அவனும் பார்த்துவிட்டான்....

"அம்மா போயிடலாம் வா..." என்னை பின்னால் இருந்து இழுக்க ஆரம்பித்தான்...

"குட்டி இழுக்காத விழுந்துடுவேன்..ன்னு சொல்ல அவனுக்கு என்னை பாம்பு கடித்துவிட போகிறது என்ற பயத்தில் என்னை பிடித்து வேகமாக இழுக்க...பின்னாலே இருவரும் வினாடிகளில் அந்த இடத்தைவிட்டு தடுமாறி வர.. படிக்கட்டுகள் இருவருக்குமே நினைவில்லாமல்.. கால் தடுமாறி வைத்து படிக்கட்டுகளில் முதலில் அவன் விழ அவனை தொடர்ந்து நான் விழ.... எப்படியோ தோட்டத்தைவிட்டு கீழே வந்துவிட்டோம்.. (இதில் வந்த அத்தனை வினாடித்துளிகளும் என் கான்சன்ட்ரேஷன் அந்த பாம்பின் அசைவுகளில் இருந்தது. எங்களை நோக்கி வருகிறதா.. குட்டியுடன் இருக்கோமே போன்ற கான்ஷியஸ் எனக்கு இருந்தது.)

நாங்கள் விழுந்த சத்தத்தில் பக்கத்துவீட்டு ஆன்ட்டி எட்டிப்பார்க்க.. "ஆன்ட்டி பாம்பு பாம்பு கருப்பா... படம் எடுத்துக்கிட்டு நிக்குது..வாங்க ஆன்ட்டி......பயமா இருக்கு..."

ஆன்ட்டி அவங்க சமையல்கார பையனை அனுப்ப அவன் தடியுடன் ஓடி வந்தான்....ஆனால் எவ்வளவு தேடியும் அந்த பாம்பு கிடைக்கவில்லை...

ஆன்ட்டி "எப்படிம்மா இருந்தது...எவ்வளவு பெருசு....?!!

"கருப்பா இருந்தது ....இல்லல்ல...கொஞ்சம் கருப்பா இருந்தது...இல்ல மேல் பக்கம் கொஞ்சம் கருப்பா உள் பக்கம் சிமெண்டு கலரா இருந்தது....நீட்டு தெரியல..தலையத்தான் பாத்தேன்.. படம் எடுத்து என்னை நேரா பாத்துது....நானும் பா....த்துட்டேன்.... நானும் அதை நே...ரா பாத்..துட்டேன் ஆன்ட்டி எ....னக்கு பயமா இருக்கு...ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ன்னு சத்தம் போட்டுது.... என் குட்டிக்கு ஒன்னும் ஆகல....அவன் என் பின்னாடித்தான் இருந்தான்.... நாங்க ஓடிவந்து விழுந்துட்டோம்.... "

பிரமை பிடித்தது மாதிரி இருந்தேன்.. என் பையனை இறுக்கி இருந்த என் கை விடவே இல்லை..அவனும் என்னை இறுக்கமாக கட்டிக்கொண்டு நின்றிருந்தான். இருவருமே ஏகத்துக்கு பயந்து போய் இருந்தோம்...

ஆன்ட்டி..தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து.. "ஒன்னும் இல்லைம்மா..போயிடுச்சி.. ஒன்னும் செய்யாதும்மா... அதுப்பாட்டுக்கும் போயிடும் .இங்க எங்கேயோ கூடு இருக்கு நாளைக்கே செதுக்கி பாத்துடுவோம்..பயப்படாதேம்மா..."

"இல்ல ஆமா ....என் பையனுக்கு ஒன்னும் ஆகல......ஆன்ட்டி ப்ளீஸ் இதை சீக்கிரம் க்ளீன் பண்ணிடுங்க.."

"நீ துணிய மாடியில காயப்போடும்மா.. இங்க வேண்டாம்.. "

========================

ஒரு வழியாக இது முடிந்த பிறகு எனக்கும் வல்லிக்கும் உள்ள பந்தம் நின்றுவிட்டதாக நினைத்தேன். கேரளாவிலிருந்து கிளம்புகிறோம்.. மூட்டை முடிச்சி எல்லாம் கட்டி நடு ஹாலில் வைத்துவிட்டு மிச்சம் இருக்கும் வேலைகளை செய்து க்கொண்டு இருந்தேன். வீடே காலி, மாலை 5 மணிக்கு ரயில். 3 மணி இருக்கும் குட்டியும் அவங்க அப்பாவும் வெளியில் சென்றுவிட்டனர். நான் மட்டுமெ இருந்தேன்.

முன் வாசல் கதவு, பின் வாசல் கதவு எல்லாம் திறந்து இருந்தது. வீட்டை பெருக்கி குப்பையை கொட்ட தோட்டத்திற்கு போக பின் வாசல் கதவிற்கு செல்ல... பந்தம் வந்து சரியாக பின் வீட்டு வாசலை தாண்டி சமையல் அறைக்கு வந்துக்கொண்டு இருந்தது. அத்தனை நீளமான பாம்பை அவ்வளவு அருகில் அப்போது தான் பார்த்தேன். குட்டி இல்லாததாலோ என்னவோ அதை பார்த்தவுடன் எனக்கு பயம் வரவில்லை... என் காலடிக்கு சட்டென்று தலையை தூக்கியது... நானும் அப்படியே நின்று அதையே பார்த்தேன். .அதுவும் என்னையே பார்த்தது... நானும் நகரவில்லை அதுவும் நகரவில்லை.... பார்த்துக்கொண்டே இருந்தோம்...

பேச ஆரம்பித்தேன். "என்ன வேணும் உனக்கு என்னை போட்டு தள்ளனுமா? எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வர.? நான் ஊருக்கு போறேன்ன்னு எப்படி தெரியும் உனக்கு..? கடைசியாக பாக்க வந்தியா? இல்ல போட்டு தள்ள வந்தியா? சொல்ல்லு.....

கொஞ்சம் கூட எனக்கு பயமில்லாமல் மிக சாதாரணமாக ரொம்பவும் பழகிய ஒருவருடன் பேசுவதை போன்று பார்த்து பேசினேன்.. அது திருப்பி நாகவல்லி சீரியல்ல வர மாதிரி டைலாக் டெலிவரி எதுவும் இல்லாமல் தலையை பேக் எடுத்து வந்தவழியே சென்றது. அது செல்ல செல்ல நானும் பின்னாலே சென்றேன்.. லேசாக என்னுடைய அசைவுகளை திரும்பி பார்த்துக்கொண்டே தான் சென்றது.. அதை கடைசி வரை தொடர்ந்து கண் மறையும் வரை பார்த்தவிட்டு வந்தேன். குட்டி உடன் இல்லாததால் பயம் இல்லாமல் இருந்தேன் என்பதை உணரமுடிந்தது....

பாம்பின் கண்களை நேராக பார்த்த அனுபவம் எனக்கு மனதில் இன்றளவும் நின்றுவிட்ட ஒன்று... சென்னையிலும் இப்பவும் பாம்புகளை பார்த்தால் நின்று நிதானமாக அவற்றின் அசைவுகளை ரசிக்கமுடிகிறது.... கண்டிப்பாக உடன் யாரும் இல்லாவிட்டால் மட்டுமே. .யாராவது இருந்தால் அவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதிலே மனம் சென்று கத்தி ஆர்பாட்டம் செய்து..... :)))

அணில்குட்டி அனிதா :- கவி சிங்கார நாகவல்லி க்கு பேசமா அப்ளை பண்ணுங்க எடுத்துக்குவாங்க...அனிமெஷன் எதுவும் இல்லாம நீங்களும் நிஜ பாம்புவும் நடிக்கலாம்..அனிமேஷன் செலவு மிஞ்சும்..!! ம்ஹிம் பிரோடிசர்க்கு தான் பாவம் நேரம் சரியில்லாம போகும் !!!..... பாம்பை நேராக பார்த்து பேசியதால் இனி உங்களை கவிபாம்பு.. இல்ல பாம்புகவி.. இல்ல நாகக்கவி....வல்லிகவி....சேக்..... ஏதொ ஒரு பேரு குடுங்கப்பா இவிங்களுக்கு...... தாங்க முடியல..

பீட்டர் தாத்ஸ் :- Owing to ignorance of the rope the rope appears to be a snake; owing to ignorance of the Self the transient state arises of the individualized, limited, phenomenal aspect of the Self.