அடித்துக்கொண்டு சாகுங்கள் ஆணவக்காரர்களே!!

பெண் இல்லாமல்
பூமிக்கு வந்துவிட்டதாக
நினைக்கும்
ஆணவக்காரர்களே!

பெற்றத்தாயையும்
உடன் பிறந்த தமக்கையும்
உன்னை நம்பிய துணைவியும்
உனக்கு பிறந்த பெண்ணும்
உனக்காக எதையும் செய்யும் உன் தோழியும்
எப்போதும்
வேண்டும் உங்களுக்கு…

அடித்துக்கொண்டு
சாகும்போதும் கூட .......??
ஆம் வேண்டுமே….
ஆத்தா..அம்மா’ வென்று
அன்புடன் அழைக்க……………
பெண் வேண்டுமே…!!

உங்களின்
வீரத்தை(??)க்காட்ட
வீட்டு பெண்கள்
அத்தனை பேரையும்
வீதிக்கு இழுங்கள்
ஆம்
ஒருவரையும்-
விட்டு விடாதீர்கள்
அவன் வீட்டு பெண்ணை
நீ நிர்வாணமாக்கு
உன் வீட்டு பெண்ணை
அவன் நிர்வாணமாக்கட்டும்

உங்களையே
உலகமென்று நம்பும்
ஒரு பெண்ணை க்கூட
நீங்கள்
விட்டுவிடக்கூடாது -


அடித்துக்கொண்டு சாகும்
ஆணவக்காரர்களே…
உங்களின் வீரத்திற்கு ??!!
பின்னால் கூட
பெண் வேண்டுமா????…….
வெட்கமாயில்லை…………..?????????

குறிப்பு :- வீரம் அதிகமாகி என்னிடம் வந்துவிடாதீர்கள்… அய்யோ!!முடிந்தால் எந்த ஒரு பெண்ணை’யும் வீதிக்கு இழுக்காமல் சண்டையிட்டு செத்து மடிந்துத்தான் போங்களேன்….
உங்களை-
பெற்றவள் பெருமிதம் கொள்வாள்,
கட்டியவள் நிம்மதி பெருமூச்சு விடுவாள்
உடன் பிறந்தவளும் ஒழிந்தான் இன்றோடு என்று விழா எடுப்பாள்,
தோழிகள் மட்டுமே துக்கப்படுவார்கள்–(கடைசிவரை இவனை திருத்தவே முடியவில்லையே என்று)-

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா………….நான் எஸ்கேப்பு… .. அம்மணி ரெம்ப சூடா இருக்காங்கோ………….நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆயிக்கிறேன்ன்ன்ன்னுங்க….நீங்களாச்சு, அவங்களாச்சு…..

பீட்டர் தாத்ஸ்:- The scars you acquire by exercising courage will never make you feel inferior.

பத்மா’ ஸ் கிட்ச்சன்

ரொம்ப நாட்களாக சமையலையும் பதிவுல சேர்க்க வேண்டும் இருந்தேன், சமையல் இல்லாமல் நாம் இல்லை. அடிக்கடி உடல் நலமின்றி டாக்டரிடம் போவதற்கு பதில், நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாலே போதும் என்று என் ஆயா அடிக்கடி சொல்லுவார்கள்.

பத்மாவதி அம்மாள்’ என்னுடைய ஆயா,(அப்பாவின் அம்மா) அவர்களுடைய சமையலை சாப்பிட தவம் செய்து இருக்கவேண்டும். சமையல் மட்டுமே அல்ல, அதை மற்றவர்கள் வயிறு நிறைய சாப்பிட வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. மனசு நிறைய, சாப்பிடுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பரிமாறுவார்கள். அவர்களிடம் சாப்பிட்ட உடம்பு மற்றவர்களிடம் இருந்து தனியாக நம்மை காட்டும். என் ஆயாவின் சமையலை சாப்பிடவே சொந்தக்காரர்களும், நண்பர்களும் வீட்டுக்கு வருவதுண்டு.

என்னுடைய ஆயாவிற்கு என்று தனி கைப்பக்குவம் இருந்தது, என் அத்தைகளும், நானும் அவர்களிடம் தான் சமையல் கற்றுக்கொண்டோம், ஆனால் அவர்கள் செய்வது போன்ற ருசி எங்களது சமையலில் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. சமையல் சொல்லி தரும் போது, சமையலை தவிர, உடன் என்ன வேலைகளை செய்யலாம், என்பதையும் சொல்லி தருவார்கள். கண் பார்த்து கை வேலை செய்யவேண்டும், யாரும் சொல்லிதராமேலேயே வேலை செய்ய பழக வேண்டும் என்று, கண்களால் பேசியே வேலை வாங்கும் திறமை அவர்களிடம் இருந்தது.

எனக்கு அவரின் சமையலில் பிடித்தது, அல்லது எனக்காக நான் விரும்பி சாப்பிடுவேன் என்பதற்காக அவர்கள் சமைக்கும் உணவு.

1. எல்லா வகை கீரையும்
2. வாழைக்காய் வருவல்
3. கத்திரிக்காய் பொறியல்
4. ரசம்
5. மீன் குழம்பு, (மீன் முள்’ளிற்கு பயந்து அதை சாப்பிடமாட்டேன்,ஆயா, ஆய்ந்து கொடுக்க கொடுக்க சாப்பிடுவேன். இன்னமும் எனக்கு மீன் ஆய்ந்து சாப்பிட தெரியாது, 1, 2 முறை முயற்சி செய்து தொண்டையில் மாட்டி பிரச்சனை ஆகி, அந்த பக்கமே தலைவைப்பதில்லை, சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்)

பொதுவாக எல்லோருக்கும் அவரின் எல்லா சமையலுமே பிடிக்கும், குறிப்பாக மீன் குழம்பு, ரசம்.. சான்ஸே இல்லை, இது வரை அப்படி யாருமே ருசியாக சமைத்தது இல்லை. வெறும் ரசமும், வாழைக்காய் வறுவலும் இருந்தால் போதும் உலகமே மறந்து போகும். சாப்பாட்டின் ருசியால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தார்கள்.

பத்மா ஆயா எனக்கு கொடுத்த சில நல்ல குறிப்புகள் :-

1. தலைக்கு குளிக்கும் தினம், முடியை முடிந்துக்கொள்ளாமல் (முடியை விரித்து போட்டு) சமையல் அறைக்கு மட்டும் அல்ல, வீட்டிற்க்குள்ளேயும் வரக்கூடாது என்பார்கள். தலைமுடி சாப்பாட்டில் வந்துவிட கூடாது என்பதற்காக சொல்லுவார்கள். சமையல் செய்யும் போது தலைமுடி கட்டி இருக்கவேண்டும்.

2. சமையல் செய்யும் போது பேசக்கூடாது, சிலர் பேசும் போது வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். ஆனால் எச்சில் தெறிப்பது அவர்களுக்கே கூட தெரியாது. அது சமையல் பொருட்களில் படும், அதனால் பேசக்கூடாது என்பார்கள். சாமிக்கு படையல் வைக்கும் நாட்களிலும் எச்சில் படாமல் சமையல் செய்யவேண்டும், அதற்கும் இதே தான் –பேசக்கூடாது.

3. சமையல் செய்யும் போது நல்ல மனதுடன், நிதானுத்துடன் செய்யவேண்டும், அதாவது கோபமாக இருக்கும் போது சமைத்தால் அதன் ருசி நன்றாக இருக்காது என்பார். பிறரின் பசியை போக்கும் உணவு நல்ல மனதுடன், அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்தால் நல்ல ருசியாகவும், பக்குவமாகவும் சமைக்க முடியும் என்பார்.

4. டிவி பார்த்துக்கொண்டு, அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டும் சமைக்க கூடாது என்பார். சமையலில் பல்லி விழுந்தால் கூட நமக்கு தெரியாது சமையல் விஷமாகிவிடும், கவன குறைவால் சமையல் தீய்ந்து விடும், அல்லது அதிக நேரம் அடுப்பில் இருந்தால் அதன் ருசி மாறிவிடும் என்பார்.

5. எந்த வகை சமையல் செய்தாலும் அதற்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் சமையலை தொடங்க வேண்டும், இல்லையென்றால், அதை வாங்கிவந்த பிறகே அந்த சமையலை செய்வார். சரி வெந்தயம் இல்லை, பரவாயில்லை என்று காரக்குழம்பு தாளிக்கவே மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு பொருள் சேர்ப்பதும் அது சாப்பாட்டிற்கு தனி ருசியும், சக்தியும் தரும் என்பதற்காகவே. அதனால் ஒன்று இல்லை, பரவாயில்லை என்று விட்டு விட்டு சமைக்க கூடாது என்பார்.

6. சமைத்த பாத்திரங்களுடனே பரிமாற எடுத்துசெல்லக்கூடாது. பரிமார தனிப்பாத்திரம் வைக்கவேண்டும்.

7. சாம்பார் கரண்டியை மற்ற உணவுகளில் போடக்கூடாது. கெட்டுவிடும்.

8. பால் காய்க்கும் பாத்திரங்களை வெயிலில் காயவைக்க வேண்டும். பொதுவாகவே பாத்திரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்த பிறகு தான் கவிழ்த்து வைக்கவேண்டும், இல்லையென்றால், பூச்சிகள் அண்டும் என்பார்.

9. சூட்டு உடம்புக்கார பெண்கள் இட்லி மாவை அவர்கள் கைவைத்து கரைக்க க்கூடாது. சீக்கிரம் புளித்துவிடும் என்பார்.

10. கீரை, மீன் குழம்பு போன்றவை சமைக்க தனித்தனி சட்டி வைத்து இருப்பார்கள். இதில் தனித்தனி என்றால் அசைவம், சைவம் வித்தியாசம் இல்லை. சட்டியின் டிசைன் அப்படி இருக்கும். கீரை கடையும் சட்டி உட்புறம் வரி வரியாக இருக்கும். ஆனால் மீன் குழம்பு செய்யும் சட்டி டிசைன் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.

11. எப்போதுமே (அவர் இருந்த வரை) முழு சமையலுக்கும் நல்லண்ணெய் மட்டுமே உபயோகித்தார். நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் தோற்றம் இளமையாக இருக்கும். அவருக்கு தலைமுடி 82 வயதிலும் நரை இல்லாமல் இருந்தது, இப்படி ஒரே எண்ணெய்யை பயன்படுத்தியது தான் அதற்கு காரணம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்பளம் , வத்தல் பொறிக்க மட்டும் ரீபைன் ஆயில் உபயோகித்தார்.

எல்லாமெ எனக்கு அவர்கள் சொல்லிக்கொடுத்தது என்றாலும், 2, 3 ம் எனக்கு அவர் அடிக்கடி சொல்லும் உபதேசங்கள். நான் இருந்தாலே வீட்டில் சத்தம் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருப்பேன், வேகமாக வேறு பேசுவேன். அவர்களுக்கு வயதாகி விட்டது அல்லவா அதனால், சில சமயம் காதை மூடிக்கொண்டு, “பாப்பா எனக்கு நீ பேசவதை ஜீரணிக்க முடியவில்லை, காது வலிக்குது, கொஞ்சம் அமைதியா இரு” நீ பேசறதனால் நிறைய சத்து உடம்பை விட்டு போய்டும், அப்புறம் வேலை எப்படி செய்வே? “ என்பார்கள். எந்த வேலை செய்தாலும் அமைதியாக செய்”என்பார்கள்.

நிறைய பதிவுகளில் சொன்னது போன்று அதிவேக கோபம், பிடிவாதம் போன்ற குணங்கள் என் சொத்தாகி போனதால், நான் சமைக்கும் போது நெடி நிறைய வந்து அனைவருக்கும் தும்மல் வருகிறது என்று, என் குணத்தை மாற்ற சொல்லுவார்கள். “நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி “ என்ற பாட்டை அடிக்கடி பாடி என்னை வெறுப்பேற்றுவார்கள்.

இன்று ஒரு இனிப்போடு “பத்மா’ஸ் கிட்சன் ” னில் சமையலை ஆரம்பிக்கலாம். இது என்னுடைய ஆயாவின் சமையல் இல்லை. அத்தையிடம் கற்றுக்கொண்டு, இப்போது அடிக்கடி ஓவன்’ ல் எளிதாக செய்ய கற்றுக்கொண்ட டிஷ்.

பத்மா’ஸ் கிட்சன் – 1. பீட்ரூட் ஹல்வா

பீட்ரூட் – 4 மீடியம் சைஸ் (துருவி, கப்’பில் அளந்து கொள்ளவும்)

சர்க்கரை – பீட்ரூட் அளவில், 3/4 அளவு (இனிப்பு வேண்டும் என்றால் அதிகமாக போட்டு க்கொள்ளலாம்)

ஏலக்காய் :- 1 (நுணுக்கியது)

நெய்:- 5 ஸ்பூன்

முந்திரி பருப்பு – 4-5 (சிறு துண்டுகளாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.)

1. ஓவனில் வைக்கும் கண்ணாடி/பீங்கான் பாத்திரத்தில் மைக்ரோ வேவ்’ 100 ல், 1.5 mins செட் செய்து நெய்யை ஊற்றி சூடு செய்யவும். பிறகு அதில் பொடித்த முந்திரி பருப்பை போட்டு 2-3 mins வைக்கவும்.

2. முந்திரியை நெய்யை வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யுடன் பீட்ரூட் துருவலை போட்டு – 4-5 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.

3. பீட்ரூட் நன்றாக வதங்கி இருக்கும், இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, திரும்பவும் 6-8 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.

அவ்வளவு தான் பீட்ரூட் ஹல்வா ரெடி – ஓவனிலிருந்து எடுத்து, பரிமாற தட்டில் கொட்டி ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும். இதே போன்று கேரட் ஹல்வாவும் செய்யலாம். இதை சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடலாம்.

அணில் குட்டி அனிதா:- ம்ஹீம்! வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா?.. நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்………..!!  ரொம்ப யோசிக்காதீங்க.. நானும்தேன்……….

பீட்டர் தாத்ஸ்:- The secret of happiness is not in doing what one likes, but in liking what one does.

6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா--Part-2

சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு- தொடருது............

பாவம் அம்மணிக்கு டிரிப்ஸ் ஒரு கையில ஒரு stage க்கு மேல ஏத்த முடியாம..போக......இன்னொரு கைக்கு மாத்தினாங்க. என்ன பிரச்சனைன்னு தெரியாமையே 3 நாளும் போய்ட்டு இருக்கு.. நம்ம கொசு அண்ணனால், மலேரியா வந்திருக்குமோன்னு ஒரு சந்தேகமே தவிர அதுவும் டெஸ்ட் ரிசல்ட் எதிலும் பாஸிட்டிவா இல்ல..பாஸிட்டிவா வரும்னு யூகத்திலேயே இத்தன டிரீட்மெண்டும் நடக்குது..................(ஒரு வேல சிக்குன் குனியவாக்கூட இருக்கலாம் னு நான் guess பண்னேன்..எதுவா இருந்தாலும்..அம்மணியோட இம்சை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் எனக்கு......ஹி..ஹி...)

4வது நாள்....குடுத்த மருந்து, மாத்திரையால அம்மணி நிலைம ரொம்ப மோசமாயிடுத்து. மனசு இறங்கி, அவங்க hubby, டாக்டர் தம்பதிகளை ரொம்ப request பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. வந்த பிறகு தான் தெரியுது, over dosage ஆல், அம்மணி வயிரெல்லாம் வெந்துபோய், தண்ணி க்கூட குடிக்க முடியாம ஆயிடுத்து. ஒரு ஸ்பூன்(ஆமாங்க நெசந்தான்) ஜீஸ் குடிப்பாங்க.. அப்படியே வாந்தி எடுப்பாங்க.. எதுவுமே உள்ளே போகல.. பேசற திராணிக்கூட இல்லாம போச்சு. திருப்பி டாக்டர் கிட்ட வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வாந்தி எடுக்க பயந்துக்கிட்டு liquid food ஒரு ஸ்பூன், 2 ஸ்பூன் ன்னு குடிக்க யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.......சாப்பிடவே முடியாம நிலைம ரொம்ப மோசமாயிடுத்து.........

அவங்க வூட்டுக்காருக்கு..ஒரே டென்ஷன்.. .வீட்டுல வந்து படுத்துக்கிட்டு ஓவரா சீன் போட்டு இம்சை கொடுக்கறாளே என்ன செய்யறதுன்னு தெரியல...... சரி என்ன ஆனாலும் ஆஸ்பித்திரியிலேயே ஆகட்டும்னு.. அம்மணிய நைஸ்ஸா ஏத்தி விட்டாரு.. எப்படி இருந்த உன்னை இப்படி ஆக்கிட்டாங்களேமா.. வா..போய் சண்டைப்போட்டுடு வரலாம்னு.. சொன்னதுதான்.. “சண்டை” ன்ற ஒரு வார்த்தைய கேட்டவுடனே...எங்க இருந்துதான் அம்மணிக்கு வீரம் வந்துதுன்னே...தெரியல.....” ஆமாங்க..விட கூடாது வாங்க போலாம்...” வரிஞ்சிக்கட்டிகிட்டு கிளம்பிட்டாங்க........

திருப்பியும் அதே ஆஸ்பித்திரி........அதே நர்ஸ் அக்கா.......ஆனா இந்த தரம் டாக்டர் அம்மா இல்ல டாக்டர் ஐயா..பார்த்தாரு.. கவிதாவோட கேஸ் ஹிஸ்ட்ரி (3 நாள்ல சாதரண ஜுரம் ஹிஸ்ட்ரி ஆயிடுத்து) படிச்சிட்டு, பெட்ல வந்து படுங்கம்மான்னாரு.
டாக்டர் “என்னமா ஆச்சு.?.”ன்னு .

(கவிதா செம கடுப்புல இருக்காங்க..அவங்கள பாத்து இந்த மாதிரியா அவரு கேப்பாரு)..

“ ம்ம்..சங்கு ஊதல ..அது ஒன்னுதான் பாக்கினாங்க..”

.டாக்டர் காதுல சரியா விழல.. உடனே..அவரு அவங்க hubby பக்கம் திரும்பி,

மேடம் என்ன சொல்றாங்க சார்?..
மேடத்தோட படத்துக்கு மால போடற நிலைமைக்கு கொண்டுவந்ததுக்கு நன்றின்னு மனசுல சொல்லிக்கிட்டு..

“டாக்டர், நீங்க ஹிஸ்டிரிய படிச்சிங்க..அவ்வளவு drugs கொடுத்த நீங்க அசடிட்டி கன்ட்ரோல் பண்ண ஒரு மருந்து கூட கொடுக்கல..அதனால அவங்களால தண்ணி க்கூட இப்ப குடிக்க முடியாம கஷ்ட படறாங்க..”

“ஓ..is it, அசடிட்டி கன்ட்ரோல் பண்ண மருந்து கொடுக்கலையா? “ஏன் கொடுக்கல.?”.

கவிதா வீட்டுகாரரும் டென்ஷன் ஆயிட்டாரு.. ‘என்ன டாக்டர் என்ன கேட்கறீங்க?”

டாக்டர், கவிதாவின் வயிரை அவரால் முடிந்த அளவுக்கு அழுத்தி (சோதனை பண்றாராமா) பார்க்க..

கவிதா..“டாக்டர்..ப்ளிஸ்..ரொம்ப வலிக்கது..”

டாக்டர்..”எங்கமா வலிக்குது..இங்கயா..இங்கயா..” என்று வயிறை ஒரு இடம் விடாம அழுத்த...

கவிதா..”டாக்டர்ர்ர்ர்ர்ர்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நீங்க அழுத்தறதுதான் வலிக்குது..” விட்டுடுங்க...” என்றார்கள்

டாக்டர் ”இல்லமா..உங்களுக்கு என்ன problem ன்னு தெரிய வேண்டாம..பொருத்துகோங்க...”

“ டாக்டர் நான் தான் சொன்னேனே அசடிட்டி problem“ என்றார் கவிதாவின் வீட்டுக்காரர்.

“ஓ is it soo..” சரி சரி வாங்க உட்காருங்க.. உங்களுக்கு நான் புரியரமாதிரி சொல்றேன் “ ன்னு சொல்லிட்டு, நர்ஸ் அம்மாவை கூப்பிட்டு “அந்த 106 நம்பர் ரூம் ரெடி பண்ணுங்க..மேடம் ரொம்ப சீரீயஸ்யா இருக்காங்க..அட்மிட் பண்ணனும்..”

சார், மேடம் நிலைமைய பார்த்தா ஒரு 2 days complete rest and observation ல இருக்கணும், அதுக்கு அப்புறம் தான் என்ன ப்ராப்ளம்னு சொல்லவே முடியும்.....அதனால் நான் அவங்கள அட்மிட் பண்ணிக்கிறேன்..

(கவிதா “அது எப்படி புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசி, ஆளமடக்கறீங்க” ன்னு மனசுலதான் நினைச்சிக்கிட்டாங்க.. வெளியில சொல்லவா முடியும்.)

“இல்ல அட்மிட் எல்லாம் வேண்டாம் டாக்டர், அசிடிட்டிக்கு மருந்து கொடுங்க போதும், அவங்கள வீட்டுல வச்சே நாங்க பார்த்துக்கறோம் “ என்றார் கவிதா வீட்டுக்காரர்.

கொஞ்ச நேரம், டாக்டரும், கவிதா வீட்டுக்காரரும் அட்மிஷன் பற்றி விவாதத்தில் இறங்க.. கவிதா..என்னடா இது வம்பா போச்சு திருப்பியும் நம்மை அட்மிட் பண்ணிடுவாங்களோன்னு பயந்து போய்,..........

“ Excuse me டாக்டர்,” என்று சொல்லிவிட்டு.........முடியாட்டாலும்....:ஓட்டமும் நடையுமா..ஆஸ்பித்திரிய விட்டு வெளியில வந்து..........அவங்க வண்டி பக்கதுல வந்து நின்னக்கிட்டு...ஸ்.ஸ்ஸ்ஸ்… தப்பிச்சேன்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..!

அப்புறம் என்ன, அசடிட்டிக்கு மருந்து சாப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆனாங்க.....இதில இன்னும் ஒரு வாரம் ஆயிடுத்து….

ஆஸ்பித்திரியிலிருந்து வந்த பிறகு அம்மணி நினைச்ச அளவுக்கு நிஜமாவே இளைச்சுதான் போய் இருந்தாங்க.. கொஞ்சம் நார்மல் ஆன பிறகு office போனவங்கள..”யாரு நீங்க” இந்த சீட்டுல வேற ஒருத்தங்க இல்ல இருந்தாங்க..நீங்க நுயூ அப்பாயின்மெண்டான்னு” கேக்கற அளவுக்கு ஆளு இளைச்சு போய் இருந்தாங்கன்னா..பாருங்களேன்... 

இதான வேணாங்கறது.. எப்படி இருந்த கவிதா இப்படி இளைச்சாங்கன்னு சொன்ன நான்..அவங்க actual weight என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேட்கறது புரியுது.. அதெல்லாம் கேக்கப்பாடது........ஏன்னா சொல்லவே முடியாது.....அம்மணி இன்னமும் அடங்காம........கொசு அண்டாத ஜிம்’மா கண்டுபிடிச்சி போய்க்கிட்டு தானே இருக்காங்க.. ......

யாருக்காவது வெயிட் குறையனும்னா.. தனி மெயில் அனுப்புங்க.......... அந்த ஆஸ்பித்திரி அட்ரஸ் தரேன்.....நேரா போனீங்கன்னா..அவங்களே அட்மிட் பண்ணிடுவாங்க.. அப்புறம் வெயிட் என்ன வெயிட்..............டேரக்ட் சங்குதாண்டீஈஈஈஈஈஈஈஈ.........................

பீட்டர் தாத்ஸ்:- Everything you need for a happy life is within yourself.

6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா-ஒரு உண்மை கதை ..

அணில் குட்டி அனிதா:- கவிதா 6 நாளில் எடைகுறைத்த நிஜத்தை எழுதபோவது நான் தேன்..வேற யாரு?? அம்மணி எவ்வளவு மிரட்டியும் இந்த ரகசியத்தை உங்கக்கிட்ட சொல்லாம விடறது இல்லைன்னு கலத்துல இறங்கிட்டேன்ங்க.........அம்மணியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத நெஞ்சம் படைத்த அசிங்கம்..ச்சே..ச்சே........சிங்கம்” இந்த “அணில்குட்டி” ன்னு சொல்லி, இந்த கதையல்ல நிஜத்தை எழுதுகிறேன்...

கவிதாவுக்கு எப்பவும் மார்கண்டேயினி'ன்னு நெனப்பு... அவங்க பையன் குழந்தையா இருக்கும் போது.........கவிதாவ எல்லாரும் அவனுக்கு “அம்மா” ன்னு சொன்னாங்க..பையன் கொஞ்சம் பெரிசா ஆனதும், பையனுக்கு “அக்கா” ன்னு சொன்னாங்க.. அதனால இப்போ அவங்க பையனுக்கு “தங்கச்சி” ன்னு சொல்ல வைக்கனுமாம்?!!!. ம்ம் ஆசை யாரைவிட்டது..அதுவும் இது பேராசை..யாராவது ரோடுல பார்த்து..என்னங்க உங்க பையன் வளர்ந்துகிட்டே போறான்..நீங்க..இன்னும் அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிட்டா போதும்..அம்மணிக்கு தலக்கால் புரியாது,..அன்னைக்கு பூரா..சீனோ சீன் தான்... என்ன நவீனோட “பாப்பா” ன்னு (அவங்க சொல்லல இவங்களே சொல்லிக்குவாங்க) சொன்னாங்கன்னு, பில்டப் பண்ணி சொல்லிக்குவாங்க..(ரொம்ப over தான், பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு பாப்பா ன்னா?) என்னத்த பண்ண, எனக்கு தங்கச்சி” ன்னு சொல்லாத வரைக்கும் நான் பிழைச்சேன்.

பீப்பாவின் sorry sorry ! பாப்பாவின் எடையை குறைக்க என்ன வழின்னு யோசிச்சி, gym க்கு போலாம்னு முடிவு பண்ணாங்க. ஆனா வீட்டுல ஆத்துகாரர் சரின்னு சொல்லனுமே?! நைசா matter ஐ ஆரம்பிச்சாங்க.. அவரோ ஒரு super look விட்டுட்டு, “உனக்கு அவசியம் தானா.. சும்மா இருக்கும் போதே அங்க கொடையது, இங்க குத்துதுன்னு சொல்லுவ..gym எல்லாம் உனக்கு சரிவராது, படுத்துடுவ..ன்னு” சொல்லிட்டு விட்டா பரவாயில்லையே.. “உனக்கு என்னமா.. இப்பவும் கல்யாணம் பண்ணப்ப எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க “ என்றார்.

ம்ம்..இதுக்கு நீ குண்டாத்தான் இருக்கேன்னு நேரடியா சொல்லியிருக்கலாம். புருஷன்காரன் சொல்லி எந்த மகராசியாவது கேட்டதா சரித்தம், பூகோளம் இருக்கா?! நம்ம கவிதாவும் அப்படிதான்.. விடறதா இல்லை, “அப்படின்னா நான் தினமும் 2 வேலைதான் சாப்பிடுவேன், ஒரு வேலை பட்னி இருப்பேன்” னாங்க. அவரோ.. “நீ 3 வேலை சாப்பிடாம இருந்தாலும் பரவாயில்ல gym க்கு போகக்கூடாது” ன்னு சொல்லிட்டாரு. அம்மணி, விடல, நச்சறிச்சு, உண்ணாவிரதம் இருந்து, கடைசியில “என்ன பிரச்சனை வந்தாலும் என்னை (அவரை) தொந்தரவு செய்ய கூடாதுன்னு”சொல்லி, பர்மிஷன் குடுத்தாரு.

முதல் நாள் போனாங்க.. exercise எப்படி செய்யனும், எவ்வளவு நேரம் செய்யனும்னு சொல்லி கொடுத்தாங்க. வேகாதி வேகமா செய்ய ஆரம்பிச்சாங்க.. அம்மணி உள்ள போனதும், fan போட்டுக்கிட்டு தான் exercise பண்ணுவாங்க. ஆனா அந்த gym ஆளுங்க fan எல்லாம் போடக்கூடாது, வியர்வை வராதுன்னு சொல்லிடாங்க. அப்புறம் தான் அம்மணிக்கு பிரச்சனை நம்ம அண்ணன் “கொசு” மூலமா வந்தது. அம்மணிக்கு கொசுன்னாவே அலர்ஜி, bus, train ல போகும் போது கூட கொசுவத்தி ஏத்தி வச்சிகிட்டு போற கேசு.. இங்க ஒன்னும் முடியில.. கொசுவ விரட்டுவாங்களா?..வேக வேகமா exercise பண்ணுவாங்களா.?? பாக்க கொஞ்சம் பாவமா இருந்தது.. போன 2 -3 நாள்ல அவங்களுக்கு நின்னுடலாம்னு ஆயிடுத்து............

ஆனா ஆத்துக்காரரும், பையனும் கிண்டல் பண்ணுவாங்களேன்னு போய் வந்துக்கிட்டு இருந்தாங்க..3 ஆவது நாள் முடிந்த நிலையில்.. இராத்திரி தூங்கும் போது “உம்” கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. “அப்பவும்..இதெல்லாம் உன் உடம்புக்கு சரிவராது..நிறுத்திடுன்னு, அவங்க வீட்டுல வூட்டுக்காரரும், பையனும் சொல்லி பாத்தாங்க…. ம்ம்.. இவங்க எங்க...!! எப்படியும் ஒரு 5 கிலோ குறைச்சிட்டு தான் நிறுத்துவேன்னு சொல்லிடாங்க.. 4வது..நாள்...இராத்திரி.. பூரா உடம்பு வலியில தூக்கம் வராம கஷ்டப்பட்டாங்க.........ஆனாலும் எங்க கவிதா யாரு? விடுவாங்களா.. .5..நாள்..உடம்பை யாரோ முறுக்கி எடுக்கிற மாதிரி வலி, அப்புறம் லேசா சுரம் வந்துவிட்டது.. இராத்திரி ஒரு 1.30 மணி இருக்கும்..அம்மணிக்கு ஜன்னியே வந்துடுத்து.. இவங்க அனத்தறது தாங்கமுடியாம, இவங்க hubby என்னாச்சுன்னு தொட்டு பார்த்தா..?!! fever எகுறுது...105 டிகிரி....... அவரு அப்ப கோவத்தை காட்டமுடியாம..அர்த்த இராத்திரியில ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போனாரு..

இவங்க வீட்டு பக்கதுல..ஒரு super டாக்டர் “தம்பதி” சகிதமா ஆஸ்பித்திரி நடத்தி ஓஹோன்னு சம்பாதிக்கறாங்க. 24 மணி நேர ஆஸ்பித்திரி என்பதால் அங்க கூட்டிட்டு போனாங்க.. எப்படா பேஷண்டு வருவாங்க அட்மிட் பண்ணலாம்னு ஒரு கும்பலே அங்க காத்துக்கிட்டு இருந்தது.. ஒரு நர்ஸ் அக்கா, அம்மணி போட்ட சீனை பார்த்துட்டு..”இவங்க ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க.!! டாக்டர எழுப்பி கூட்டிட்டு வரோம்னு போனாங்க.. ம்ம்! வந்தாங்க டாக்டர் அம்மா, அவங்கள பார்த்தவுடனே அம்மணி சுரம் இன்னும் ஒரு டிகிரி ஜாஸ்தியாயிடுத்து........பின்ன என்னங்க,..அர்த்த இராத்திரியில பூதம் மாதிரி நைட்டீன்னு ஒன்ன மாட்டிக்கிட்டு..தல நிறைய (தூங்கறதுக்கு முன்னாடி வைச்சிருப்பாங்க போல) பூ வைச்சிக்கிட்டு...நெத்தி நிறைய பெரிய ரவுண்டு ஸ்டிக்கர் பொட்ட வைச்சிக்கிட்டு வந்தா.. பாக்கறவங்களுக்கு கதி கலங்கி போகாதா..?!!

வந்த டாக்டர் அம்மா, உடனே அட்மிட் பண்ணனும், டிரிப்ஸ் ஏத்தனும். ஜுரத்த குறைக்கனும்னு சொல்லி வேக வேகமா எங்க ஓடிட போறாங்களோன்னு ஒரு ரூம்ல போட்டு அடச்சி, டிரிப்ஸ் ஏத்த ஆரம்பிச்சிட்டாங்க...அடுத்த நாள் காலையில ஒரு பெரிய (மாத்திரை, ஊசி, மருந்து) லிஸ்ட் கொடுத்து வாங்கிட்டு வரசொன்னாங்க.. ஊசி மாத்திரமே ஒரு 20 இருக்குங்க.. அப்புறம் ஒரு நர்ஸ அம்மா வந்து, இரத்தம், யூரின் டெஸ்டு எடுக்க எழுதி கொடுத்தாங்க. அதுவும், அவங்க சொல்லற லேப்ல போய்த்தான் எடுக்கனுமாம். பாவம் அவங்க hubby, பெருங்குடியில், ஏதோ ஒரு சந்துல இருந்த அந்த லேப்பை கண்டுப்பிடிச்சி, கொடுத்து, ரிசல்ட் வாங்கி வர்றத்துகுள்ள நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தாரு,,,,,.

நம்ம கவிதா நிலைமைக்கு வருவோம், காலையில போட ஆரம்பிச்ச ஊசிங்க..நர்ஸம்மா..நிறுத்தல.. இந்த கை, அந்த கை, இந்த இடுப்பு, அந்த இடுப்புன்னு போட்டு தாக்கறாங்க...... எனக்கு சிரிப்பு அடக்க முடியல.........அம்மணிக்கோ வாய திறக்க முடியில. அந்த பக்கம் அவங்க hubby நடக்கறத எல்லாத்தையும் “மவளே வேணான்னு சொன்னேன் கேட்டியா, அனுபவி” ன்னு பார்த்து ரசிச்சிகிட்டு இருந்தாரு.. 3வது நாள் கவிதாவால பேசக்கூட முடியல..தட்டு தடுமாறி அவங்க hubby ஐ கூப்பிட்டு, “பழிவாங்கனும்னு முடிவோடதான் இருக்கீங்களா..படிச்சவரு தானே நீங்க?.. இவ்ளோ ஊசி போடறாங்க.. என்ன என்னவோ மாத்திர தராங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?.. இன்னும் ஒரு நாள் இங்க நான் இருந்தா..எனக்கு சங்கு ஊத வேண்டியது தான்..என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க..ப்ளிஸ்..”: கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க........... அவரோ ‘’அப்போ ஒரு நாள் கழிச்சே வீட்டுக்கு போலாம்னு” கூலா சொல்லிட்டு போய்ட்டாரு.. வாழ்க்கையில அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் தவற விட தயாரா இல்ல.

சரி ..சரி.............சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு....அடுத்த பதிவுல பார்ப்போம்......

பீட்டர் தாத்ஸ் :- A new attitude invariably creates a new results.

அய்யோ! இந்த பக்கம் வந்துடாதீங்க!! கவிதா பாடியிருக்காங்க..

அணில் குட்டி அனிதா:- ஜன கன மன பாட சொன்னா... இங்க பாருங்க..அம்மணி அழுது தீத்துட்டாங்க..அத வேற சர்வேசன் அண்ணன் சூப்பர் ன்னு சொல்றாரு.. நிசமாத்தான் கேட்டாறா..இல்ல..அம்மணி வருத்தப்பட போறாங்கன்னு.. சொன்னாறான்னு தெரியல.. அவ்வளவு சோகமா பாடியிருக்காங்க.... அம்மணிய பாட வேண்டாம்னு நானும் எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன்..முடியல... நீங்களும் கூட அழணும்னா... இங்க போங்க...!!

http://neyarviruppam.blogspot.com/2007/07/12.html

சரி..அம்மணி'மட்டும் இல்ல இன்னும் நிறைய பேரு பாடி அசத்தி இருக்காங்க.. நீங்களும் சீக்கிரம் பாடி அசத்துங்க.. .பாவம் சர்வேசன் அண்ணே... கூவி கூவி அழைக்கிறாரு..நீங்க யாரும் கண்டுக்கவே மாட்டேன்ங்கறீங்க...

கொஞ்சம் அவரை கண்டுக்கோங்களேன்.........

பீட்டர் தாத்ஸ்:- Success is a journey, not a destination.

சினிமாவை பார்த்து திருந்தியவர்கள் உண்டா?

சினிமா என்பது ஒரு தனிமனிதனின் கற்பனை. நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது தன்னுடைய கற்பனையை கதைகளாக்கி சினிமாவை படைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் படைப்பு அன்றி வேறு ஒன்றும் இல்லை. ஒரு படத்தின் மொத்த அம்சமும் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட கருத்தே. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.

ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை அவர் காசாக்குகிறார். நாமும் அவரின் கற்பனையை, திறமையை கண்டு மகிழ்ந்து, திரைப்படத்தை காசாக்கி கொடுக்கிறோம். ஒரு படத்தில் சொல்லியிருக்கிற கதையில் வரும் நல்லவை, கெட்டவை எல்லாமே அந்த தனி நபரின் முழு கற்பனை, அவருடைய பார்வையில் அவர் சொல்ல நினைப்பதை சொல்லியிருப்பார் அல்லது அவரின் இயற்கை குணத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்குமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. அப்படியிருக்க ஒரு கதையை இது சரி, இது தவறு என்று யாராலும் யாரையும் சாடமுடியாது, அதில் எந்த அர்த்தமும் இல்லை.

அப்படி நாம் விமர்சனம் செய்தால் அந்த குறிப்பிட்ட திரைப்படத்தை நம் சிந்தனையில், நம் பார்வையில் நாம் எப்படி யோசிக்கிறோம் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம் என்ற தனிப்பட்ட கருத்தே. பருத்திவீரன் என்ற திரைப்படத்தை அனைவரும் பாராட்ட ஒருவர் மட்டும் அது ஒரு படமா? பெண்ணிடம் பணத்தை வாங்கி, வேலை வெட்டி இல்லாமல் ஊரை ஏமாற்றி சுற்றும் ஒரு உதவாக்கரை இளைஞனின் கதை. இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று எழுதி இருந்தார். இப்படியும் சிலரால் திரைப்படங்களை அவர்களின் பார்வையில் விமர்சிக்க முடிகிறதுதான்.

இதில் சினிமாவை பார்த்து பாதிப்பு என்று சொன்னால், “காதல்” என்ற ஒரு விஷயம் மட்டுமே. காதலினால் சிந்திக்கும் தன்மையை இழந்த நம் மக்கள், சினிமாவை பார்த்து அதில் வரும், ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை மையமாக வைத்து சொல்லப்பட்ட காதலை, பின்பற்றும் காதலர்கள் அதிகம். “ஜில்லுன்னு ஒரு காதல் “ படம் பார்த்துவிட்டு, அதைபோன்று வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண், எந்த அளவு தன் அறிவை இழந்தவளாக இருக்கிறாள் என்பது அவளுக்கே தெரிவதில்லை. “ஏக் துஜே கேலியே “பார்த்து தற்கொலை செய்து கொண்ட காதலர்களும் உண்டு. "அலைபாயுதே" பார்த்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் பைத்தியங்கள் உண்டு. "இதயத்தை திருடாதே" பார்த்து, எல்லோரைடமும் "ஓடி போலமா?" என்ற கேட்டவர்களும் உள்ளனர்.

சினிமாவை பின்பற்றி, அது பொழுது போக்கிற்கு மட்டுமே என்பதை மறந்து, தன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் இவர்கள், சினிமாவில் சொன்னப்பட்ட ஒரு விஷ்யம் ஒரு தனிமனிதனின் கற்பனை, அது சினிமாவிற்கு மட்டுமே பொருந்தும், யாதர்த்த வாழ்க்கைக்கு பொருந்தாது என்பதை சிந்திக்க தவறுகிறார்கள். Start Camera, Action, and Pack up, என்பதோடு சினிமா காதலும், காதல் வசனங்களும் முடிந்து போகின்றன.

வியாபார நோக்கோடு, கவிர்ச்சிக்காக வேண்டி, பெண்கள், பாட்டு, நடனம் இத்தியாதிகள் சேர்க்கபடுகின்றன. இதில் ஒரு விஷயம் புரியவில்லை, பெண் அமைப்புகள் - பெண்களை திரையில் இழிவாக பேசிவிட்டாலோ, பாடல்கள் எழுதிவிட்டாலோ, குய்யோ, முய்யோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ஆனால், அவிழ்த்து போட்டுவிட்டு ஆடும் பெண் நடிகைகளை எதிர்த்து இதுவரை போர்கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்ததாக தெரியவில்லை.

மிகவும் சமுதாய நோக்கோடும், சிந்தனையோடும் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவது இல்லை. நாமும் அந்த படங்களை பார்த்து திருந்திவிடுவதும் இல்லை. அப்படி திருந்தி இருந்தோமானல், அப்படி படங்கள் மட்டுமே திரைக்கு இப்போது வந்திருக்கும். சினிமாவை நம்பியே வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அது அவர்களின் தொழில், செய்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.

அதற்கு அடிமையாகி மூடர்கள் போல திரியும் நாம், சினிமா என்பது ஒரு பொழுது போக்குக்காக மட்டுமே என்பதை உணர்ந்து அதற்கு எந்த அளவு நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவும் தரவேண்டுமோ, அவ்வளவே தரவேண்டும்.

கறுப்பு பணம் என்பதை கருவாக கொண்டு எடுத்த “சிவாஜி” படத்தில் உள்ளேயும் , வெளியேயும் எவ்வளவு கறுப்பு பணம் நடமாட்டத்தில் இருந்தது என்பதை அனைவரும் அறிவர். சமீபத்தில் தான் ஜாக்கி சேனின், “Rob B Hood “ திரைப்படம் பார்த்தேன், அதில் வருகின்ற சில முக்கிய காட்சிகள் “சிவாஜி” படத்தில் அப்பட்டமாக அப்படியே வருகின்றன. இப்படி தனிமனித கற்பனையன்றி, அடுத்தவர்களின் கற்பனையையும் திருடி படங்கள் வெளிவருகின்றன. நாமும் அதை பார்த்துவிட்டு ஆகா..ஓகோ என்று கொண்டாடுகிறோம், திரை அரங்குகளில் அடித்துக்கொள்கிறோம், பால் அபிஷேகம் செய்கிறோம்.. பாராட்டு மழையும் பொழிகிறோம்….

அணில் குட்டி அனிதா:- மக்கா… தனியா லெட்டர் அனுப்பி சினிமா விமர்சனம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. …...அடடா….அம்மணி திருந்திட்டாங்க போல இருக்குன்னு நினைச்சேன்….ம்ஹீம்.. எங்க.. …. பதிவா எழுதிட்டாங்க… முடியலைங்க….!!

பீட்டர் தாத்ஸ்:- Failure is the opportunity to begin again more intelligently.

எங்கள் வீட்டு மரம்ஏறி’யும் - சட்டியில் சாப்பாடும்

எங்கள் வீட்டில் தென்னை மரம் ஏறி, தேங்காய் மற்றும் ஓலைகளை வெட்டி தருபவரை “மரம் ஏறி” என்று அழைப்போம். அவரின் பெயர் ஜெயபால். ஆயா, தாத்தா, அப்பா மட்டுமே பெயர் சொல்லி அழைப்பார்கள். மற்றவர்கள் “மரம் ஏறி” என்று தான் கூப்பிடுவோம். 3 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து அவரே வேலை இருக்கிறதா என்று கேட்பார்.

எங்களுக்கு தேவை என்றால், யாராவது அவருடைய கிராமத்திற்கு போய் தான் அழைத்து வர வேண்டும். விழுப்புரம் தாண்டிய உடனே சென்னை வரும் நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் வரும். (இப்போதும் உள்ளது), அதனை அடுத்த சிறு கிராமம் தான் அது. பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஜெயபால்’ என்று கூறினால் போதும், அவர் எங்கிருந்தாலும் மக்கள் நம்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.


இவர் வரும் போது ஒரு குடுவை (படம் #.1) எடுத்து வருவார். இந்த குடுவை முறம் செய்யும் நாரை கொண்டும், தென்னைமரத்து பாலையை கொண்டும் செய்திருப்பார்கள். மிக கடினமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். இந்த குடுவையை இடுப்பில் பச்சை கலர் பெல்ட்டை கொண்டு எப்படியோ முடிந்து இருப்பார். அது மரம் ஏறும் போது அவருடன் இருக்கும். அதில் தேங்காய், ஓலைகளை வெட்டும் கத்தி இரண்டு, ஒரு சிகப்பு கலர் துண்டு இருக்கும். கால்களில் விழலால் அல்லது வைக்கோலால் செய்த ஒரு பெல்ட்டை (படம் #.2) மாட்டிக்கொண்டு (படம் #.3) மரம் ஏறுவார். இந்த பெல்ட்டை அவர் தோலில் தொங்கவிட்டுக்கொண்டு வருவார்.

கூலி,தேங்காய்’களின் எண்ணிக்கை பொருத்து தான், ஒரு மரத்திற்கு ரூ.3ம், ஒரு தேங்காய்க்கு மட்டை உரித்து கொடுப்பதற்கு 10 பைசா கொடுப்பார்கள். கடைசியாக 5 ரூ & 25 பைசாவாக அவரின் கூலி உயர்ந்தது. ஓலை பின்னுவதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது எனக்கு மறந்துவிட்டது. அநேகமாக ஒரு ஓலைக்கு ரூ.1 –க்குள் தான் இருக்கும். அதற்கு மேல் இருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.

கண் சிமிட்டாமல் கவனித்தால் கூட எப்படியும் 1, 2 தேங்காய்களை அவர் எடுத்து குடுவையில் மறைத்து விடுவார். அவர் குடுவையை கழட்டி வைத்துவிட்டு அப்படி இப்படி போகும் சமயம் பார்த்து, நான் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். நல்ல பழக்கம் இல்லை என்றாலும், கூலி கொடுத்த பின்னும் அவர் தேங்காய்களை மறைத்து வைப்பது வாடிக்கை என்பதால், எத்தனை எடுத்து வைத்துள்ளார் என்பதை பார்ப்பேன். அதில் அவரின் சாமர்த்தியத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அன்றி வேறொன்றும் இல்லை. அந்த தேங்காய்களை கடையிலோ, வீடுகளிலோ விற்றுவிடுவார். அதில் அவருக்கு கொஞ்சம் பணம் வரும். மேனஞ்மென்ட் படித்தவர்கள் இப்போது இவையெல்லாம் என்னையும் சேர்த்து தொழில் சாதூரியம் என்று சொல்லுவார்கள்.

இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு சாப்பாடு சட்டியில் ஓரமாக கைப்படாமல் வைப்பார்கள். அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, கழுவி ஓரமாக கவிழ்த்துவிட்டு போவார், பிறகு அதனை நாங்கள் ஒரு முறை நன்றாக கழுவி அதற்கான இடத்தில் எடுத்து வைப்போம். நாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை அவர்கள் தொட்டதே இல்லை. ஓரமாக சந்து வழியே வந்து அப்படியே சென்று விடுவார்கள். வீட்டிற்க்குள் அவர்களாகவே வரமாட்டார்கள். வெளியில் கொடியில் தொங்கும் துணிகளை கூட தொடாமல் குனிந்து அல்லது ஒதுங்கி செல்வார்கள். வேலை நடக்கும் போது அவர்கள் தொட்டுவிடுவார்களோ என்று , ஆயா துணிகளை உள்ளே எடுத்துவந்து விடுவார்கள்.

அவர் ஓலை கழித்து , ஓலை பின்னும் வேலைக்கு வரும்போது எல்லாம், சாப்பாடு நாங்கள் தான் தருவோம். சாதம் வடித்த கஞ்சி, சாதம், புளிவிட்டு கடைந்த அரைக்கீரை தான். ஓலை பின்ன வரும் போது குடும்பத்தோடு வருவார். பெண் ஆட்களும் வேலை செய்ய வருவார்கள். ஒரு 4, 5 ஆட்கள் வேலைக்கு வருவார்கள்.

ஆயாவை நான் தான் ரொம்பவும் தொந்தரவு செய்து கேள்விகள் கேட்பேன். அவர் தொட்டு வெட்டி கொடுக்கும் தேங்காவை மட்டும் நாம தொட்டுத்தானே உள்ளே எடுத்து வைக்கிறோம், சாமிக்கும் அந்த தேங்காவை தானே உடைக்கிறோம். ஏன் இப்படி சட்டியில் சாப்பாடு கொடுக்கிறாய்?, மனுஷன் தானே அவர்? பாவமாக இருக்கிறது என்பேன். “உனக்கு அது எல்லாம் புரியாது, தெரியாது, பேசாமல் சொன்னதை மட்டும் செய், கூட கூட பேசாதே” என்று வாயை அடைத்து விடுவார்கள். எனக்கு மட்டும் இந்த பாகுபாடு பிடிக்காது. “ஏன் சுட சாதம் கொடுக்கும் போது கஞ்சி வேற கொடுக்கற?, என்று கேட்பேன். அதற்கு அவர்- “கஞ்சி அவங்களுக்கு குளுக்கோஸ் கொடுக்கற மாதிரி, வெயில்ல நிறைய வேலை செய்யறாங்க, இது தான் தாகத்தை தணிக்கும் “ என்பார்கள்.

அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிணற்றலிருந்து இரைத்து ஊற்றவேண்டும், குனிந்து கையை குவித்து குடிப்பார்கள் அல்லது அவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற சொல்லி வாங்கி வைத்து க்கொள்வார்கள். எனக்கு இதில் புரியாத விஷயம், அவர்கள் பின்னிய ஓலையை எண்ணும்போது நாங்களும் தொட்டு தான் வாங்கி அடுக்கி வைப்போம். ஓலைகளில் அவர்களின் கைப்படாத இடம் இருக்கவே முடியாது.

எப்படியும் மதியம், என்னை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆயா தூங்கிவிடுவார்கள். அப்போது யாருக்கும் தெரியாமல் மரம் ஏறி குடும்பத்துடன் ஒன்றுக்குள் ஒன்றாகி ஆகிவிடுவேன். மரம் ஏறி மனைவி பக்கத்தில் உட்கார்ந்து ஓலை பின்ன கற்றுக்கொள்வேன், வித விதமான முறைகளை சொல்லிதருவார்கள். சின்ன சின்ன சொப்பு கூட நான் விளையாட ஓலையில் பின்னித்தருவார்கள். (என் தொந்தரவு தாங்காமல்) எனக்காக சில கழித்த (வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட) ஓலைகளை ஜெயபால் வெட்டி தருவார், நானும் அவர்களுடம் உட்கார்ந்து பின்னுவேன், அவர்களின் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு சுற்றி வருவேன், ஓடிப்பிடித்து விளையாடுவேன். ஓலையை வைத்து பாம்பு செய்து அவர்களை பயமுறித்தி விளையாடுவேன். ஓலையை மேல் நோக்கி பிடித்து வேகமாக கிழித்து ராக்கெட் விடுவேன்.

ஆயா எழுந்துவிடும் சமயம், நானும் அவர்களிடமிருந்து தள்ளி வந்து விடுவேன். நான் யாரோ அவர்கள் யாரோ என்று. கூலி வாங்கும் போது என்னன குழந்தைகளும், பெண்களும் தூர இருந்து பார்த்து லேசாக சிரிப்பார்கள்.

அணில் குட்டி அனிதா:- கதை சொல்லிட்டாங்களா? ம்ஹீம்..அப்பன்னா.. இந்த வேலை இல்லன்னா.. வீடு வீடா போயாவது ஓலைபின்னி நீங்க பொழச்சிக்குவிங்களா கவிதா?.. மக்கா உங்க வீட்டுல ஏதாவது ஓலை பின்ற வேல இருந்தா சொல்லுங்க………..அம்மணி துள்ளி குதிச்சி வந்து செஞ்சி குடுத்துடுவாங்க… as she mentioned above, you guys can pay to her.. oopppppppps….ஏழை மக்களை ஒரு குடும்பம் கூலி விஷயத்துல எப்படி ஏமாத்தி இருக்கு பாருங்க.. ??!!

பீட்டர் தாத்ஸ் :- We will not know unless we begin.

கணினி ஓவியங்கள் சில....

ஆற்றங்கரையில்.....



கண்களில் ஒரு கவிதை.....



இருளின் ஒளியில்.....

எட்டுக்குள் நானும் மாட்டிக்கிட்டேன்............

நண்பர் சிறில், விடாது கருப்பு & பிசாசு குட்டி’ யும் என்னை எட்டுக்குள்ளே கூப்பிட்டு இருக்காங்க. இதில் சிறில் என்னை கூப்பிடாம அணிலை கூப்பிட்டு இருக்காங்க.. அணிலுக்கு ரொம்பத்தான் எல்லாரும் இடம் கொடுக்கிறார்கள்..ம்ம் பார்த்துக்கிறேன்...சரி.. எட்டுக்குள் போகலாம் வாங்க......

அணில் குட்டி அனிதா:- சிறில் அண்ணே..என்னை மதிச்சி கூப்பிட்டதோட, கவிதாவை நீங்க ஓரம் கட்டனீங்க பாருங்க. .அங்கத்தான் நீங்க நிக்கறீங்க..! அம்மணி என்னை விட்டுட்டு தனியா எழுதறாங்க. .எப்படி எழுதறாங்கன்னு பாக்கலாம்.. ஆனா....இங்க நான் பேசுறது உங்களுக்கு மட்டும் தான் கேக்கும்..அவங்களுக்கு கேக்காது சரியா........

1. பிறந்தது :- குடும்பத்திற்கே ஒரே பெண், குல விளக்கு என்று முன்பே ஒரு பதிவில் அணில் சொல்லி இருக்கிறது. பிறந்தது, வளர்ந்தது, (பள்ளி) படித்தது எல்லாம் விழுப்புரம். கல்லூரி சென்னை எத்திராஜ். தாத்தா, ஆயாவிடம் தான் வளர்ந்தேன். அதனால் நிறைய கட்டுப்பாடு. நடை, உடை, பழக்கவழக்கம், பேச்சு என்று எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. 

அணில்:- ஓ...கட்டுப்பாடா வளர்த்தப்பவே இவ்ளோ ஆட்டம் ஆடறீங்களா?. இன்னும் free ஆ வளத்து இருந்தா.. ஸ்ஸ்ப்பா.. பூமி தாங்காதுடா சாமி சரி சரி....மேல.......போங்க......!!

2.ஆர்வம்:- பொதுவாக எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புவேன். அதற்கான முயற்சியும் செய்வேன்.

அணில்:- ம்ம்ம் .....முயற்சி செய்யுங்க..அதுங்காக அடுத்துவங்க உசுர வாங்காதீங்க.......... சரி.. மேல சொல்லுங்க..

3.குணங்கள்:- எல்லாவற்றிலும் வேகம், அதனால் பொறுமை இன்மை, அதிவேக கோபம், நினைத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதம், அடம், நிறைய பாசம் & அன்பு, தனித்தன்மையோட இருக்க வேண்டும் என்று நினைப்பேன். போராட்ட குணம் அதிகம், கிடைக்காதது, நடக்காதது, முடியாதது என்று எதுவும் இல்லைன்னு முழுசாக நம்புகிறேன். அதிகமா பேசிக்கிட்டே இருப்பேன். ரொம்ப அமைதியாகவும் இந்த பூனையும்.....மாதிரியும் சில சமயம் இருப்பேன். முகத்துக்கு நேராக பட்டேன்று எதையும் பேசிவிடுவேன். அதனால் அதிகமான பிரச்சனைகளையும் அனுபவித்து உள்ளேன். ஆனாலும் திருந்தவில்லை.

அணில்:- நீங்க திருந்தமாட்டீங்கன்னு சொல்லனுமா வேற, அதான் ஊரு உலகத்துல இருக்கற அத்தன பேருக்கும் தெரியுமே......!! ம்ம்..ம்ம்.............மேல.... மேல ....!!

4.பொழுதுபோக்கு:- இயற்கை,குளிர்ந்த நிலவு, இரவில் நட்சத்திரம் எண்ணுதல், மெல்லிய தென்றல், ரயில் பயணத்தில் சன்னல் ஓரம், கிராமத்து பச்சை, மழையில் சாரல், விடியற்காலை பனி, கூட்டமில்லாத கோயில், சாமியுடன் சண்டை, அடர்ந்த மரம், அணிலுடன் பேச்சு, குழந்தைகளுடன் விளையாட்டு, பாட்டு கேட்பது, பாடுவது, தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருந்தாலும் பேசிவிடுவது, சிரித்துவிடுவது, இதற்காக கணவரிடம் திட்டு வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, மண் கைவேலை பொருட்கள், மரப்பாச்சி பொம்மை, பழைய காலத்து டிசைனில் செய்யப்பட்ட மரப்பொருட்கள், மண் சொப்புகள், சில மணி நேர நிசப்தம், கூட்டமில்லாத கடைகள், அலை அதிகமில்லாத கடல், பரிசல் பயணம், நிலவின் ஒளியில் எனக்கு தோன்றும் கவிதைகள், பச்சை நிறம், கறுப்பின மக்கள், பெரிய கட்டிடங்கள், மரங்கள் சூழ்ந்த சாலை.......... (ஐயோ...இன்னும் நிறைய இருக்கே..)

அணில்:- ஆமா நாங்களே.........எப்படா நிறுத்துவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கோம்..இதுல.. இன்னும் வேற..இருக்காமாம்.........எப்பவும். உங்களோட ஒரே காமெடி போங்க....:))))))))))))

5.உணவு:- உணவில் அதிக சிங்கினாதம். மிகவும் பிடித்த குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். சுவை இல்லையென்றால் தொடவே மாட்டேன். பிடிக்காத உணவுகள் என்பதை விட உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகள் அதிகம். நண்பர்கள், சொந்தங்கள் வீட்டுக்கு செல்லும் போதோ, வெளி ஊர்களுக்கு, இடங்களுக்கு செல்லும் போதோ.. சாப்பாடு ஒரு பெரிய பிரச்சனை. நானே சமைத்தால் கூட ருசி இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன்.

அணில்:- நீங்க தின்னா எங்களுக்கு என்ன தின்னாட்டி எங்களுக்கு என்ன.. இது எல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா..... தாங்க முடியலடா சாமி............

6.விருப்பம்:- எல்லாவற்றிலுமே ரொம்ப செலெக்டிவாக இருப்பேன். இது தான் என்று முடிவு செய்த பிறகே செய்வேன். வாங்கும் பொருட்கள், பார்க்கும் சினிமா, நெருக்கமாக பழகும் மனிதர்கள், உடை, அணியும் நகைகள், உணவு என்று ஒரு முடிவுடன் இருப்பதால் எனக்கு நிறைய அமைவதில்லை என்றே சொல்லுவேன். காரணம் பிடித்தது இல்லையென்றால் வேறொன்றை மாற்றிக்கொள்ளாத என் பிடிவாதம்.

அணில்:- இது எல்லாம் உருப்படற கேஸ் இல்லன்னு நான் மட்டும் இல்ல எல்லாருமே முடிவு பண்ணியாச்சி.............ம்ஹீம் மேல......

7.உள்ளே-வெளியே:- பொதுவாக என்னை பார்ப்பவர்கள் மிகவும் சாது என்று நினைப்பதுண்டு. அதற்கு மாறாக இருப்பேன். அடுத்து நான் பேசுவதை வைத்து, ரொம்ப கடுமையான, சீரியஸான பெண் என்றும் நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை.

அணில்:- ஸ்ஸ்ப்பாஆஆ..முடியலப்பா.. ஏங்க இவங்கல 8 போட கூப்பிட்டது யாரு? கவிதாவ ஒரு பாயிண்டு பேச சொன்னாவே...ஓவரா பேசுவாங்க.. இப்ப 8 பாயிண்டா.. அய்யோ.. எப்ப முடிப்பாங்களோ தெரியலையே....

8.லட்சியம்:- ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும், முதியோர் இல்லமும் ஆரம்பிக்க வேண்டும். தரமான கல்வியையும், அளவில்லாத அன்பையும் அவர்களுக்கு தரவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. செய்வேன் என்று நம்புகிறேன்.

அணில் :- முதியோர் இல்லம்னா.. நீங்க தான கவிதா முதல் உறுப்பினர்...?...

பீட்டர் தாத்ஸ்:- The secret of joy in work is contained in one word-Excellence. To know how to do something well is to enjoy it.

எட்டுக்குள் அழைப்பவர்கள் :-
1. சிவகுமார்ஜி
2. சீனு
3. மங்கைஜி
4. மதுரா
5. உஷாஜி
6. நா.அன்ந்தகுமார்
7. தேகாஜி
8. கொத்ஸ்

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

MNC யில் வேலை பார்ப்பது தவறா?

வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் மேல் மிகுந்த அக்கறை இருப்பது போல் பேசும் நம் நாட்டு இளைஞர்கள், ஏன் இங்கேயே இருந்து அதே அக்கறையுடன் இந்தியாவையும் , இந்தியநாட்டு மக்களையும் காப்பற்ற வேண்டியது தானே? படிக்கும் போதே எதற்கு வெளிநாட்டு கனவுகளோடு இருக்கிறார்கள்? ஏன் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லையா.? பணம் மட்டுமே பிரச்சனை என்றால், போய் சம்பாதித்து, உங்களின் தேவைகளை சுயநலமாக முடித்துக்கொள்ளுங்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை உங்களின் குடும்பம், உங்களின் உழைப்பு, உங்களின் பணம். யார் உங்களை கேட்க போகிறார்கள்.?

ஆனால், அங்கே உட்கார்ந்து கொண்டு, இந்தியர்களுக்கும், இந்தியாவிற்க்கும் அறிவுரை சொல்லிக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும் இருக்காதீர்கள். இந்தியா இப்படி இருக்கிறது, இந்தியாவிற்கு வயசாகி போச்சி, இந்தியாவில் தலைவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள் என்று ஆவேசமாக ஏன் ஏழுதவேண்டும். நீங்கள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, அதனால் ஒரு செளகரியமான வாழ்க்கைமுறையை அங்கு அனுபவிக்கிறீர்கள். அதனால் உட்கார்ந்த இடத்தில் இருந்து, ஒன்று என்ன, ஒரு நூறு அறிவுரைகளை இந்தியாவிற்கு உங்களால் சொல்ல முடியும். ஏதாவது செய்ய முடியுமா என்பது தான் கேள்வி?. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், அதே வெளிநாட்டில் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை செய்யுங்கள்.

மேற்கண்ட இந்த கருத்தை நான் சொல்ல “நாகை சிவா” விற்கும் எனக்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. என்னை அவர் திருப்பி “இவ்வளவு அக்கறையாக MNC யில் வேலை பார்க்கும் நீங்க பேசக்கூடாது” என்று சொன்னார். அதற்கு அவரின் ‘பங்கு” சந்தோஷ் ஜால்ரா தட்டுகிறார். இருவருக்குமாக ஏன் MNC யில் வேலை பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டியுள்ளது.

MNC யின் வரவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொருத்தவரை வெளிநாட்டு தொழில் கொள்கைகளில் நிறைய பிரச்சனைகள் உண்டு. இந்தியாவிற்குள்ளே வேற்று மாநிலத்தில் ஒரு தொழிலை தொடங்கி செய்வது மிக சிரமம். கேரளா அதற்கு ஒரு உதாரணம். தொழிலதிபர் டாடா’ வென்று நினைக்கிறேன். “தெரியாமல் கால் வைத்து விட்டேன், அதனால், என்னுடைய ஒரு கால் செருப்பை கேராளாவில் விட்டுவிட்டு வர வேண்டியதாகிவிட்டது" என்று தன்னுடைய தொழில் நிறுவனத்தை பிரச்ச்னை காரணமாக அங்கே முடியபோது சொன்னதாக எனக்கு நினைவு. இப்போது நம் வெளிநாட்டு கொள்கைகள் ஓரளவிற்கு இளகியதாக இருந்தாலும், ஒரு வெளிநாட்டு கம்பெனி அத்தனை எளிதாக தொழில் செய்ய நம்முடைய Foreign Trade Policy எளிமையானதாக இல்லை. அதையும் மீறி பல வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கின்றன. காரணம்,

மிக குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் வேலையாட்கள்
மிக குறைந்த முதலீடு
இரவு/பகல் நேர வித்தியாசத்தால் பணி விரைவில் முடிகிறது
இந்தியர்களின் - படிப்பு, திறமை, உழைப்பு

பொதுவாக அனுபவத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கும், MNC களுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறேன்.

இந்திய கம்பெனி :-
1. மிக குறைந்த சம்பளம்
2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் & அதிக இடைவெளி.
3. தனி மனித சுதந்திரம் இல்லை
4. வேலை தரம் குறைவு
5. அடிப்படை வசதி முதல், தேவையான வசதிகள் இல்லை
6. தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தல் குறைவு
7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகள் எப்போதும் அன்றாடம் காய்ச்சிகள்

MNC
1. அதிகமான, மிக அதிகமான சம்பளம்
2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இல்லை, இடைவெளியும் இல்லை.
3. தனி மனித சுதந்திரம் உண்டு
4. வேலை தரம் மிக அதிகம்
5. எல்லா வசதிகளும் உண்டு
6. தொழில்நுட்ப வளர்ச்சியை உடனுக்குடன் பயன்படுத்துதல்
7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகளும் வாழ்க்கையின் எல்லா அடிப்படை தேவைகளுடனும் வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.

இந்திய கம்பெனிகளில், முதலில் மிகவும் சம்பளம் குறைவு. அதற்கு அதன் முதலாளிகள் மட்டுமே காரணம். தான் மட்டுமே சம்பாதித்து வாழ்வை அனுபவிக்க வேண்டும், தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் முன்னேற அவர்கள் விடுவதே இல்லை.
தனக்கு கீழ் வேலை செய்யும் தன்னைவிட குறைந்த சம்பளம் வாங்கும் ஒருவன், இரு சக்கர வாகனம் வாங்கி, அதே இரு சக்கர வாகனம் தன்னிடம் இல்லையென்றால் இவன் அவனை பார்த்து வெந்து போவான். இவர்களின் எண்ணமும், பக்குவமில்லாத அறிவும், வாழ்க்கை முறையும் இந்தியர்களின் பரம்பரை பழக்கமாகிவிட்டது.

முதலாளிக்கு எத்தனை லாபம் வந்தாலும், 10% , 20% வருடத்திற்கு சம்பளம் கூடம் அதுவும் நேரத்திற்கு கொடுக்கமாட்டார்கள், அவர்களிடம் போராட்டம் செய்து, அடவாடி செய்து, வேலை நிறுத்தம் செய்து வாங்கவேண்டும்.

அடுத்து, வேலைதரம். International Standard தேவையில்லை. Local Standard கூட இருப்பதில்லை. படித்து, இந்த வேலையை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வேலை திறமை வாயந்தவர்கள் எல்லாம் இரண்டாம்பட்சம், முதலாளிக்கு, அறிவே இல்லையென்றாலும் கூஜா தூக்கும் சிலரால், வேலை தரம் என்பது சுத்தமாக இல்லாமல் இருப்பது தான் உண்மை.

அடுத்தது, வேலை செய்ய அடிப்படை வசதி - போதுமான காற்று, வெளிச்சம், மேஜை, நாற்காலி, வேலை செய்ய தேவையான சாதனங்கள், தண்ணீர், சாப்பாடு, கழிவறை (ஆண், பெண் என்று தனித்தனியே), சாப்பிடும் அறை, ஓய்வெடுக்கும் அறை, first Aid Facility, பாதுகாப்பு (security) போன்ற எல்லா வசதிகளும் எல்லா இந்திய கம்பெனிகளில் இருப்பதில்லை. நான் வேலை பார்த்த அத்தனை இந்திய கம்பெனிகளிலும் கழிவறை பெரிய பிரச்சனையாக எனக்கு இருந்து இருக்கிறது. ஆண் பெண் தனி கழிவறைகள் இல்லாமல், அதனால் தொற்று நோய் பரவி நான் பாதிக்கவும் பட்டிருக்கிறேன். அதை பலமுறை நேரடியாக, மருத்துவ குறிப்புகளுடன் என்னுடைய மேலாளாரிடம் சொல்லியும் அதற்கான எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த விஷயத்தை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நான் மட்டும் இன்றி எல்லா பெண்களுமே கழிவறை தொற்றுவியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் கூச்சப்பட்டு கொண்டு வெளியில் சொல்லுவதில்லை. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாததால் உடல் மட்டும் இல்லை மனமும் நாள் ஆக ஆக வியாதியால் தொற்றிக்கொள்ளும். எடுத்துக்காட்டு - 1. தேவையான வெளிச்சமும், காற்றும் இல்லையென்றால் இயற்கையாக கொஞ்சம் கொஞ்சமாக நம் மனநிலை பாதிக்கப்படும். 2. நாம் தினமும் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலி, சரியாக இல்லாவிட்டால் முதுகு, இடுப்பு, கழுத்து வலி வரும். இது வாழ்நாள் முழுதும் நம்மின் ஒரு நிரந்தர வலியாக மாறிப்போகும். பலருக்கு நாம் ஏன் எதற்காக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று கூட தெரியாது.

அடுத்து வேலை செய்ய தேவையான அடிப்படை சாதனங்கள். பேனாவிலிருந்து, வேலை சம்பந்தமான software வரை எல்லா வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. என்ன கொடுக்கிறார்களோ அதை வைத்து க்கொண்டு, அவர்கள் எதிர்பார்க்கும் வேலையை செய்து கொடுக்கவேண்டும். அதில் கண்டிப்பாக அவர்கள் தரத்தை எதிர்பார்ப்பதில்லை. வேலை முடிந்தால் போதும். தரம் இங்கு பெரிதாக பேசப்படுவதில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியும், பயன்படுத்தலும் - உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது. இன்னமும் நோட்டு புத்தகம் வைத்து வேலை மற்றும் கணக்கு எழுதும் இந்திய கம்பெனிகள் ஏராளம். IT, தவிர, மற்ற நிறுவனங்களில் கம்பியூட்டர் என்பது கேள்வி குறியே. பள்ளி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில்வே, தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எங்குமே தேவையான, அல்லது நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப வசதியை கூட பயன்படுத்தவதில்லை. அதற்கான ஆர்வமும் அவர்களிடம் இல்லை. (சென்னையை மட்டும் கவனிக்காதீர்கள், தமிழ்நாட்டில் பிற இடங்களை தயவுசெய்து பாருங்கள்). என் சொந்த அண்ணன் (Railway Guard) வேலை பார்க்கும் “விழுப்புரம் சந்திப்பு” ரயில்வே நிலையத்தில், அவர்களுக்கு என்று ஒரே ஒரு கம்பியூட்டர் உள்ளது. அதுவும் யாரும் உபயோகப்படுத்துவது இல்லை. உபயோகிக்க அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க படவில்லை. நோட்டுப்புத்தகங்களில் தான் எல்லா வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது மொபைல் இருப்பதால் என்னுடைய அண்ணனை அவசர வேலைக்கு அதன் மூலம் அழைக்கிறார்கள். இல்லையென்றால், ஒரு ஆளை வீட்டுக்கு அல்லது அவர் இருக்கும் இடம் தேடி அனுப்பி, “உங்களுக்கு இன்றைக்கு இந்த வண்டியில் வேலை” என்று சொல்லும் அளவிற்குதான் நாம் வளர்ந்து இருக்கிறோம்.

கடைசியாக ஒரு பெண்ணாக நான் உணர்ந்த சுதந்திரம், முதலாளிகள் (ஆண்கள்), தேவையில்லாமல் அங்கே இங்கே என்று பார்ப்பது இல்லை, தனியாக அவர்கள் அறைக்கு அழைத்து தேவையில்லாமல் வழிவதோ, சிரித்துக்கொண்டே மேலே கை வைக்க முயற்சி செய்வதோ இல்லை.

MNCயில் சேர்ந்த புதிதில் வேலையை செய்ய சற்று சிரமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வேலை தரம் 100%. செய்யும் அத்தனை வேலைகளிலும் 100% தரம் இருக்க வேண்டும். திறமைக்கும், படிப்பிற்கும் வாய்ப்பளித்து, கை நிறைய சம்பளம் கொடுத்து, அடிப்படை வசதிகள் அத்தனையும் செய்து கொடுத்து, சக மனிதனை சமமாக நினைத்து நடத்தும் MNC களில் வேலை செய்வது சுலபமாக உள்ளது. மேலும், தரமாக வேலை செய்ய கற்றுக்கொள்ள முடிகிறது, சுதந்திரமாக இருக்கமுடிகிறது. இங்கே உள்ள ஒரே பிரச்சனை கலாசார சீர்கேடு. அதை நானே எழுதி இருக்கிறேன். ஆனால், அதை நல்ல முறையில், நமக்கும் நம் கலாசாரத்திற்கும் கேடு வராமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் இடம் தேடி வந்து இருக்கும், நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நம் வேலை தரத்தையும், அறிவையும், தனி நபர் வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

MNCயில் வேலை செய்வதால் நான் வெளிநாட்டில் வேலை செய்வதாக அர்த்தம் இல்லை, என்னுடைய இடத்தில், வேற்று நாட்டுக்காரர், என்னுடைய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு கம்பெனி நடத்துகிறார். அதில் தான் வேலை செய்கிறேன். அவரின் நாட்டை தேடி சென்று அவருக்கு சேவகம் செய்யவில்லை. மேலும் அங்கே உட்கார்ந்து கொண்டு.. இந்தியர்களுக்கு இது இல்லை அது இல்லை என்று அளக்கவும் இல்லை. வெளிநாடு வாய்ப்பு கிடைத்து ஒரு வேலை சென்றாலும், என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பேனே அன்றி, இதுபோல் உபதேசம் செய்து கொண்டு இருக்கமாட்டேன்.

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா!! முடியல........... அம்மணியோட ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.. புள்ளைங்க பாவம் எங்கேயோ செவனேன்னு இருக்குங்க. .அதுங்கள கூட்டுவச்சி இவ்வளா.................ஆம் பெரிய லக்சர் வுட்டு இருக்காங்க.. பாவம் என்ன பண்ண போறாங்களோ தெரியல.. (புலி அண்ணே காத குடுங்க.. அம்மணிய வுடாதீங்க.. நல்லா புராண்டிவிடுங்க.....ரத்தம் வரணும் சரியா?, தல சந்தோஷ்க்கு சொல்லவே வேணாம்.. நான் பேசினாவே ஓவராத்தான் டான்ஸ் ஆடுவாரு .......ம்ம்..பாக்கலாம் ..!.

அம்மணிக்கு வேல வெட்டி இல்லன்னு நல்லா தெரியுது..... “சும்மா இருக்கற சங்கை எவ(ளோ)னோ ஊதி கெடுத்தானாம்..... “ உங்களுக்கு எல்லாம் இந்த பழமொழிக்கு அர்த்தம் இப்ப சரியா புரிஞ்சி இருக்குமே...!! ம்ம் ..அதே தான்........!! வாங்க அப்படி ஓரமா உக்காந்து அம்மணி ஒதை வாங்கறத பாக்கலாம்........ரொம்ப நாள் ஆச எல்லாருக்கும் நெரவேற போகுது.....:))))))

பீட்டர் தாத்ஸ்:- Pursue one great decisive aim with force and determination.

அட பைத்தியகாரர்களா?

என்ன நடக்கிறது இங்கே? நாம் எதை நோக்கி எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை.

இன்று காலையில் எழுந்து பல் விலக்கினார்களா என்று கூட தெரியவில்லை. எல்லா திரை அரங்குகளிலும் அப்படி ஒரு கூட்டம், அதில் ஒருவர் சொல்கிறார், “எனக்கு ஒரே பயமா இருக்குங்க..“ (அவர் மேலே தொடருமுன் நான் மனதில் . சரி..சிவாஜி நல்லா இருக்குமா இல்ல கவுத்துக்குமான்னு; பயப்படுகிறார் என்று நினைத்தேன்) ஆனால் அவரோ.. “காலையில 7 மணிக்கு முன்னால வந்தேன், எனக்கு டிக்கெட் கிடைத்து, நான் படத்தை பார்ப்பேனா!!?”என்று பயமாக இருக்கிறது.

எவ்வளவு பணம் கொடுத்து இவர்கள் டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. அதில் ரசிகர்கள் எல்லோருமே இத்தனை பணம் கொடுத்து வாங்கும் பொருளாதார சூழ்நிலையில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும்.

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, நாம் ஒரு தொழில் செய்து சம்பாதிப்பது போல, நடிப்பு என்ற தொழிலை செய்து நடிகர்கள் சம்பாதிக்கிறார்கள். பொழுது போக்குவதற்காக பார்க்க வேண்டிய சினிமாவை, இத்தனை சீரியஸாக எடுத்துக்கொண்டு, இவர்கள் இப்படி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொள்வது ரொம்பவும் வருந்தத்தக்கதாக உள்ளது. தன் குடும்பத்திற்காகவும், தனக்காகவும், தன்னை சுற்றி உள்ளவர்களுக்காகவும் இப்படி ஏதாவது செய்வார்களா?

சினிமா & தொலைக்காட்சியை நம்பியே ஒரு கூட்டம், வியாபார நோக்கோடு பெரும் பணத்தை முடக்கி உள்ளது. வியாபார நோக்கோடு மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை சாமானியர்கள் உணராமல் பைத்தியம் பிடித்து “தலைவா....தலைவா” என்று ஆராதனை செய்கிறார்கள். இது ரஜனிக்கு மட்டும் இல்லை. ஒரு முறை தொலைக்காட்சியில் விஜய்’யின் ரசிகர் ஒருவர், “உடல் மண்ணுக்கு, உயில் விஜய்”க்கு என்று பெருமையுடன் சொல்லுகிறார். இப்படிப்பட்ட அடிமட்ட ரசிகர்கள் கூட்டத்தை முழுவதுமாக நம்பியே தனி நபர்கள் கோடிஸ்வரர்களாக வாழ்கிறார்கள். எத்தனையோ பேர் சினிமாவின் மூலம் வாழ்கிறார்கள் என்றாலும், நம்முடைய அறிவுக்கும், பார்வைக்கும் தெரியாமல் மோசமாக பாதிக்கப் பட்டவர்களும், அழிந்து போனவர்களும் அதிகம்.

ஒரு முறை எங்களுடைய பிறந்த ஊருக்கு சென்றிருந்த போது, எங்களது தெருவில் இருந்த சில இளைஞர்கள், சாக்லெட் எடுத்து வந்து கொடுத்தார்கள். அவர்களிடம் நான் பார்த்த சந்தோஷம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. எதற்கு என்று கேட்டதற்கு , அதில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் சதீஷ் என்ற இளைஞர் சொன்னார்,

“இன்னைக்கு தலைவரோட பிறந்தநாள். “
“ஓ..யாரு உங்க தலைவர்? “
“அட என்னக்கா நீங்க ரஜினி’ சார்’ தான்!! “
“ ஓ.. எல்லா வீட்டிற்க்கும் போய் கொடுக்கறீங்களா?”
“இல்லையா பின்ன.. தல பிறந்தநாளைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கவேண்டாமா? “
“தலைவர் உங்களுக்கு என்ன செய்யறாரு?
“அட என்னக்கா நீங்க ..எத்தன வீட்டுக்கு போகனும்.. சும்மா..கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க.. தலைவர் செய்யறது எல்லாம் வெளியில சொல்ல மாட்டாரு..... அவரு ஒருத்தருக்கு செய்தா லட்சம் பேருக்கு செய்ததா அர்த்தம் !!”..
“சரி உங்களுக்கு என்ன செய்தாருன்னு சொல்லுங்க..”
“அக்கா எல்லாருக்குக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடச்சதுக்கா.. “
“ஓ.....என்ன பாக்கியம்..”
“அவரோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டேன்.. அத என் வாழ் நாள்ல எப்பவும் மறக்கவே முடியாது..”

அதற்குமேல், எனக்கு என்ன சொல்லுவது , கேட்பது என்று தெரியவில்லை, அவனையே வியப்புடன் பார்க்க.. “அக்கா..வரேன் “..ன்னு சென்று விட்டான். மாலை அந்த இளைஞனின் தாயை பார்த்தபோது..இதை பற்றி கேட்டேன்.. அதற்கு அவர்கள், “பெத்த அம்மா அப்பா..க்கு ஒன்னும் செய்யல.....கூட பொறந்த அக்கா 2 இருக்கு..அதுங்களுக்கும் ஒன்னும் செய்யல.. ஏன் அவனுக்கே இன்னும் ஒன்னும் செய்துக்குல.. தலைவர் தலைவர் ன்னு எப்பபார்த்தாலும் ஏதாவது ஒன்னு செய்துகிட்டு, ஒழங்காவும் படிக்காம, இப்ப வேல வெட்டி எதுவும் இல்லாம.. முழுநேரமும் இதே மாதிரி இன்னும் 4, 5 புள்ளைங்ககூட சேர்ந்து வாழ்க்கைய வீணடிச்சிக்கிட்டு இருக்கான். ஏம்மா..நீதான் அவனுக்கு 4 நல்ல வார்த்தை சொல்லிட்டு போயேன்..... “ ஏக்கம் நிறைந்த கண்களுடன் அந்த அம்மா பேசியது இன்னமும் நினைவிருக்கிறது.

“சரிங்க ஆண்ட்டி ! நான் சொல்றேன்.. “ என்று சொன்னேனே தவிர..அந்த பிள்ளையை திருப்பி நான் ஊர் திரும்பும் வரை பார்க்கமுடியவில்லை. நான் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையில் அவன் இல்லை என்பது எனக்கு புரிந்தது..அவனின் அம்மாவுக்கும் புரிந்துதான் விட்டுவிட்டார்கள் என்பதும் தெரிந்தது.

இப்படி எத்தனை எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய “சிவாஜி” படம் திரையிடப்படும் திரை அரங்குகளில் பார்க்கமுடிகிறது.

ஒருவரை பிடிக்கலாம், அதற்காக இப்படியா? எப்போது இந்த சினிமா மற்றும் தலைவர்’களின் பைத்தியங்களும் மாறுமோ....?

அணில் குட்டி அனிதா:- அட அட அட...!! கவிதா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அட்வைஸ் அ?.. மக்களா..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கவிதா இந்த பதிவ எழுதிட்டாங்க.....போல.. (அவங்க எப்ப சாதாரணமா எழுதி இருக்காங்க ? ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது.!!.) இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு எப்பவும் போல சொல்லிக்க விரும்புறேன்.. இப்பவும் டிவி’ல ரஜினி பாட்டு, இல்ல படம் வந்தா....தலைவா..ன்னு சொல்லி........வராத விசிலை இழுத்து இழுத்து................. படு கேவலமா அடிப்பாங்க..!! அதை பாத்து அவங்க வூட்டுக்காரரும், பையனும்............. தலையல அடிச்சிக்கிட்டு எடத்தையே காலி பண்ணிடுவாங்க........!! ஏன்னு கேக்கறீங்களா..??? அதான் சொன்னேனே... கேவலமா இருக்கும்னு...... 10, 12 வயசுல இருந்து..விசில் அடிக்க கத்துக்கறாங்களாம்.. இன்னமும் சரியா விசில் கூட அடிக்க தெரியல.. படு கேவலமா ஓரு சவுண்டு வரும்..அதை இவங்க விசில்..ன்னு சொல்லிக்குவாங்க......!!! ஹோ.........சரி நான் ஓவரா விசில் பத்தி பேசி.. அம்மணிக்கு கோவம் வந்து எனக்கு சங்கு ஊதிட போறாங்க.. அதனால..நீங்க மிச்சத்த பாத்துக்குங்க....................... வரட்டா......பை..பை.....சீ.யூ.....ஆல்........சூன்..

பீட்டர் தாத்ஸ்:- The smallest good deed is better than the grandest intention.

கேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - லிவிங் ஸ்மைல் வித்யா

இன்று கேப்பங்கஞ்சி' குடிக்க வந்து இருப்பவர் சாதிக்க நினைக்கும், சாதித்து கொண்டு இருக்கும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள், நாம் அனைவரும் அறிந்த பத்திரிக்கைகள் மூலமும், இணையதலம் மூலமாகவும் பிரமலமாகி இருப்பவர். இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

வித்யா, பொதுவாக மற்ற நண்பர்களை இங்கு அழைக்கும் போது அவர்களின் பதிவுகளை படித்து அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டு பின்பு கேள்விகள் கேட்பேன். உங்களை பொறுத்தமட்டில், இணையதளத்தில் தேடி தேடி சில விஷயங்களை தெரிந்துகொண்டு வந்து கேள்விகள் கேட்டு இருக்கிறேன். என்னுடைய கேள்விகள் சிறுபிள்ளைதனமாகவும், அறியாமையால் எழுந்தவையாகவும், உங்கள் மனதை புண்படுத்தும் படியாக இருந்தாலும் தயவசெய்து மனம் பொருத்து எனக்கு பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேட்கப்பட்ட கேள்விகள் உங்களை மையமாக வைத்து மட்டும் இல்லை, எல்லா திருநங்கைகளையும் மனதில் கொண்டே.. இதோ.. நம்முடன்.. வித்யா......

வாயை புடுங்கற ரவுண்டு :-

கவிதா:- வாங்க வித்யா எப்படி இருக்கீங்க?. உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி உங்கள் சிறுவயதை பற்றி. நீங்கள் எப்போது மனதளவில், உடலளவில் உங்களிடம் மாற்றத்தை உணர்ந்தீர்கள்?

வணக்கம், ரொம்ப நல்லா இருக்கேன். சிறுவயது பற்றி சொல்வதென்றால், எனக்கு இயல்பான தொரு இளமைப் பிராயம் அமையவில்லை என்று தான் சொல்லமுடியும். கிட்டதட்ட வெறுமையான இளம்பருவம், தாயின் இழப்பு, அப்பாவின் படி, படி என்ற தொடர் கெடுபுடிகள் என கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

என் நினைவு தெரிந்து கிட்டதட்ட 10,11 வயது எனக் கொள்ளலாம், அப்போது, சிறுவர்களோடு விளையாடுவதை விட சிறுமிகளோடும், பெரிய அக்காக்களோடும் விளையாடுவதே எனக்கு சௌகரியமாக இருந்தது, வீட்டுக்கெடுபிடிகளையெல்லாம் தாண்டி சில்லாக்கு, தாயம், பல்லாங்குழி இவற்றில் அய்க்கியமாகி இருந்தேன். தாயரற்ற பிள்ளை / நன்றாக படிக்கும் பிள்ளை (சும்மா படி படின்னு இம்ச பண்ணதால வேற வழியில்லாம கொஞ்சம் சுமாரா படிச்சேன்) உறவினர்கள் எனது பெண்தன்மையை, மென்தண்மையாக புரிந்து கொண்டனர்.

நாட்பட 13/14 வயதில் அக்காவின் சட்டை பாவடையை போட்டு அழகு பார்க்க ஆரம்பித்த பிறகு பொம்பள சட்டி, பொட்ட மாரி போன்ற கேலி கிண்டல்கள் ஆரம்பமாயிற்று, அதை தவிர்ப்பதற்காக யாருமற்ற நேரங்களில் அறையில் அக்காவின் ட்ரஸ்ஸை போடுவது, கண்னுக்கு மை தீட்டுவது, தேங்காய் எண்ணெயை உதடுக்கு (லிப்ஸ்டிக்!) தேய்ப்பது, துண்டை தலையில் கட்டிக்கொள்வது (எங்கக்கா குளித்தபின் துண்டை கட்டிக் கொள்வதைப் போல) போன்ற சேட்டைகள் செய்து என் ஆசைகளைத் தீர்த்து கொள்வேன். குறிப்பா, அக்காவோட லாங்க் ஸ்கர்ட்டை கட்டிக் கொண்டு, வேகமா சுத்திகிட்டே சடாரன்னு உட்காருவேன். அப்போது நான் நடுவுல உக்காந்திருக்க, என்னை சுற்றிலும் பாவாடை அழகா வட்டாமா அமைந்திருக்க, அந்த அழகை நானே ரசித்து ரசித்து மகிழ்வேன்.

எந்தளவு என்னை பெண்ணா நினைச்சு மகிழ்ந்தேனோ, அதே அளவு ஜாக்கிரதையாவும் இருந்தேன். மற்றவர்கள் என் பெண்தன்மையை அடையாளம் காணக்கூடாது என்பதில் கவனமா இருந்தேன். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று என் பெண்தன்மையை அம்பலப்படுத்தி விடும். இதனால், புறவயமாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். ப்ளஸ் டூ படிக்கும் போது என்னை வெறுப்பேற்றவே நான்கு பேர் டீம் ஒன்று இருந்தது. என்னை கூனிக்குறகச் செய்யும் ஆயுதமாக என் பெண்தன்மை குறித்த இழிசொல்லை பயன்படுத்துவார்கள்.

போர்டில் என் பெயரை எழுதி
.... ஒரு படிப்ப்பலி,
.... ஒரு உழைப்பலி,
..... ஒரு தொழிலலி என்று எழுதி வைப்பார்கள்...

இதனாலேயே கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சேருவதையே தவிர்த்தேன். பெண்களுடனும் பழகமுடியாமல், ஆண்களொடும் பழக முடியாமல் தவித்த போது புத்தகங்களே எனக்கு உற்ற தோழியாக இருந்தது. அப்படித்தான், இலக்கியம் பரிச்சயமமனது.

யு.ஜி. முடித்து, பி.ஜி. சேர்ந்த போது, நாடகத்துறையில் கவனம் செலுத்தி வந்தேன். அப்போது, திருச்சியில் உள்ள பாலியல் சிறுபாண்மையோர்க்கான தொண்டு நிறுவனத்திற்கு வரப்போக இருந்ததன் மூலம் திருநங்கைகளை நேரில் கண்டேன், அவர்களைப் பார்க்கும் போதும் அவர்களுடன் பேசும் போதும் நான் என்ன என்பது தெளிவாயிற்று..

கவிதா:- உணர்ந்த பின், உங்களின் மனநிலை எப்படி இருந்தது?. யாரிடமாவது சொன்னீர்களா?. எதனால் இப்படி என்று தெரிந்து கொள்ள முற்பட்டீர்களா?

உணர்ந்த பின் பெரிசா ஒன்னும் தோணல முன்பு சொன்னபடி நாடகம், வாசிப்பு என ஏதோ ஒன்றில் எண்ணத்தை செலுத்தி வந்தேன். ஆனாலும், பி.ஜி.யும் முடிச்சு, பி.எச்.டி சீட் கிடைச்ச நாட்களில் எனக்குள் முழு பெண்ணாக மாறவேண்டும் என்ற வெறி அளவு கடந்து விட்டது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதை விட எங்களை ஏன் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று
தான் யோசித்தேன்.

திருச்சியில் உள்ள நண்பர்கள் நேரு மற்றும் குமரன் ஆகியோரிடம் மட்டும் என் நிலைமையை எடுத்துச் சொல்லி, அவர்களின் உதவியுடன் சென்னைக்கு சென்றேன். அப்பாவிடன் சென்னையில் வேலை கிடைத்திருப்பதால் சென்னைக்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி சமாளித்தேன். அங்கு சென்ற பின் எனது அபிமானமிக்க பேரா. மு. ராமசாமியிடமும் என் நிலைமையை தெரிவித்து என்னால் முனைவர் படிப்பை தொடரமுடியாது என்று கூறி புனேவிற்கும் சென்று விட்டேன்.

கவிதா:- அடிக்கடி எனக்கு தோன்றும் கேள்வி இது, திருநங்கையாக ஆவதற்கு நீங்கள் செய்து கொள்ளும் நவீன ஆப்ரேஷன் ஆகட்டும், அதற்கு முன் பழைய முறைப்படி செய்யப்பட்ட "அறுத்து எரிதல்" நிகழ்வாகட்டும், பெரும் வேதனையும், மனவலி, உடல் வலியையும்,பிழைத்தால் வாழலாம் என்ற நிலையை உங்களுக்கு கொடுக்கிறது. இதற்கு பதில், உங்களின் மனநிலையை மனோதத்துவ (counseling) முறைப்படி மாற்ற ஏதாவது முயற்சி செய்யலாம் இல்லையா?.. அப்படி நீங்களோ இல்லை வேறு யாரோ செய்து இருக்கிறார்களா?.. முயன்று இருக்கிறீர்களா?

பொதுவாகவே, தன்னை திருநங்கையாக உணரும் நபர் முதலில் ஹிஜ்ரா கம்யூனிட்டி (திருநங்கைகள் குழுமத்தில்)யில் சேருவார்கள். அங்கு மற்ற திருநங்கைகளோடு ஊடாடுவது மூலம், ஆப்ரேசன், அங்கீகாரமின்மை, வலி என அனைத்தையும் அறிந்து தெரிந்து கொள்வர். அதையும் மீறி ஆப்ரேசன் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருப்பவர்களுக்குத்தான் மேற்சொன்ன முறைமைகள் நடைபெறும். சிலர் ஆப்ரேசன் செய்யாமலும் இருப்பதுண்டு. மேலும் சிலர் வெளித்தொற்றத்தில் ஆணாகவும் திருநங்கைகள் மத்தியில் திருநங்கையாகவும் வாழ்வதுண்டு. தீர யோசித்து அவரவர் எடுக்கும் முடிவுதான் இது. ஒரு வகையில் ரியல் டைம் கவுன்சிலிங் என்றே கூறலாம்.

கவிதா:- ஆப்ரேஷன் இல்லாமல் ஹார்மோன் தெரபி முறை ஏதாவது உங்களுக்கு பயன் அளிக்குமா?. அதாவது திருநங்கையாக இல்லாமல் ஆணாக'வே (அ) பெண்ணாகவோ இருக்க சாத்தியகூறுகள் மேற்சொன்ன முறைகளில் முடியுமா?

தன்னை திருநங்கையாக உணரும் நபருக்கு, முறையான மருத்துவ திட்டத்தின் படி முதலில் கவுன்சிலிங் தரப்படும். அக்கவுன்சிலிங்கின் போதே மருத்துவருக்கு அந்நபர் குறித்த ஒரு தெளிவு கிடைத்துவிடும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ரியல் லைப் டெஸ்ட், கடந்த கால வாழ்க்கை குறித்த மனோவியல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அந்நபருக்கு என்ன சிகிச்சை தேவை என்பதை மருத்துவர் கணித்துவிடுவார். இதில் மருத்துவரை விட அந்நபரின் முடிவிற்கே முக்கியத்துவம் தரப்படும். அந்நபர் எந்த பாலினை தேர்வு செய்கிறாரோ அதுவே மேற்கொள்ளப்படும். ஆனால், மாற்று பாலினமாகவே அனைவரும் விரும்புகிறார்கள்

ஜெண்டர் அய்டெண்டிட்டி டிஸ்ஆர்டர் (GID _ Gender Idnetiy Disorder) உள்ள நபரின் விருப்பமே முதன்மையானது. அவரது விருப்பத்திற்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பது, திருநங்கைகள் குறித்து முதலில் சிந்தனை செய்த ப்ராய்ட் சொல்கிறார்.

கவிதா:- ஹார்மோன் குறைபாடு உடல் அளவில் ஒரு ஊனம், உங்களுக்கும் உடலில் ஒரு ஊனம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

சொல்லலாம், அது இடஒதுக்கீடு கேட்பதற்கு உதவலாம். ஆனால், எனது தனிப்பட்ட கருத்தின்படி சொல்வதென்றால், பாலின அடையாள சிக்கல் என்பது குறைபாடு கிடையாது. குறைந்த எண்ணிக்கை அவ்வளவே. சராசரி ஆண்/பெண் க்கு கிடைக்கும் அங்கீகாரமும், வாய்ப்பும் கிடைக்கும் பட்சத்தில் எங்களாலும் எந்த தடையுமின்றி எல்லாத் துறையிலும் சிறப்பாக பணியாற்ற முடியும். வேண்டுமானால் பாலியல் சிறுபாண்மையினர் என்று சொல்லலாம்.

கவிதா:- திருநங்கை'களுக்கு தனி அங்கீகாரம் கொடுக்கனும்னு நினைக்கறீங்க. இந்த அங்கீகாரம் உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் நலம் இல்லையா?. அதற்காக முயற்சி ஏதாவது செய்தீர்களா?.

சரி தான், ஆனால் குடும்பம் என்பது என்ன? சமூகத்தின் சிறிய அலகுதானே?! ஆரம்பத்தில் ஸ்பஸ்டமாக நான் என்ன என்பது தெரியவரும்போது என்னை கண்டு
அதிரும் குடும்பம் நாளடைவில் நாளடைவில் என்ன இருந்தாலும் என் பிள்ளை என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

மனதால் ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு சமூகமும், சமூக நியதிகளுமே காரணமாக உள்ளது. முதலில் வீட்டில் ஒரு திருநங்கை இருப்பது அவ்வீட்டிற்கான அவமானசின்னமாக கருதப்படுகிறது. இது உறவுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சகோதர/சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடையாகிறது. உதாரனத்திற்கு சொல்வதென்றால், ஒரு குடும்பத்தில் திருடன், கொலைகாரன் போன்ற குற்றவாளி இருந்தால் எத்தகைய இருக்கமான சூழல் நிலவுமோ அதைவிட மோசமான விளைவுகளை எங்கள் குடும்பம் சந்திக்க நேர்கிறது. மட்டுமன்றி தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லை ஆனால், அவமானம் மட்டும் நேர்கிறது என்ற குற்றவுணர்வும் எங்களை வெளியேற்றுகிறது.

சட்டமும், சமூகமும் ஏற்றுக் கொண்டால் குடும்பம் தானாகவே எங்களை ஏற்றுக் கொள்ளும்.

கவிதா:- உங்களுடைய ரத்த சொந்தங்கள் உங்களை அங்கரிக்காத போது எப்படி மற்றவர்கள் அதை ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இதில் ஒரு விசயத்தை நன்கு யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் சொல்லும் ரத்த சொந்தங்கள் என்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்; என் சார்ந்து பல கற்பனையை வளர்த்தவர்கள்; அவர்களுக்கு என் மாற்றம் ஒரு பெரும் இடியாகத்தான் இருந்திருக்கும். ஆக, நான் இப்படி இருப்பதால் நஷ்டம் அவர்களுக்கும் தான் அந்த கோபம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

ஆனால், எந்த சம்பந்தமும் இல்லாத மற்றவர்களுக்கு நான் இப்படி இருப்பதால் என்ன கேடு வந்தது? இப்போ நீங்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள், அதில் உங்களோடு ஒரு அய்ம்பது பேராவது பயணம் செய்யாலாம். அந்த அய்ம்பதில் ஒன்றாக நானும் பயணம் செய்கிறேன். அப்படி இருக்க என்னை மட்டும் அருவெறுக்கவோ, கேலி செய்யவோ யாருக்கு என்ன அவசியம் இருக்கிறது? என் சொந்தம் ஏற்றுக் கொள்ளவில்லை நடுத்தெருவில் நிற்கிறேன் என்பதற்காக என்னை நிந்திக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?

கவிதா:- இந்த பால் மாற்றம் பற்றி உங்கள் குடும்பத்திற்கும், உங்களை சுற்றி உள்ளவர்களும் சரியாக புரிந்து கொள்ளும் படி (awareness) செய்தால் மட்டுமே அவர்கள் உங்களை ஏற்று கொள்வார்கள். உங்கள் குடும்பத்திற்கு செய்தீர்களா?

நான் புனேக்கு சென்ற சில மாதங்களிலேயே நண்பர்கள் மற்றும் பேராசிரியர் மூலமாக என் பெற்றோர்க்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. எனவே அவர்களை சென்னைக்கு வரவழைத்து சில படித்த திருநங்கைகள் முன்னிலையில் அவர்கள் புரிந்து கொள்ளும் படி செய்து (அன்று முழுவதும் அழவும், சண்டை போடவுமே சரியாக இருந்தது) ஆற்றாமையுடன் அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்புனேன்.

கவிதா:- இதை உங்களை போல உள்ளவர்களுக்கு அறிவுருத்துகிறீர்களா? அவர்கள் ஒதுக்க படாமல் இருக்க வேண்டும் அல்லவா?

இதில் அறிவுறுத்த ஒன்றும் இல்லை. கிட்டதட்ட எல்லோருக்கும் இப்படித்தான் நடக்கிறது.

கவிதா:- நான் படித்து தெரிந்து கொண்ட வரையில், இந்த பால் மாற்று அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சையுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. பெண்ணிற்கு என்ற சில நடை உடை பாவைனைகள் உள்ளன. அதை தெரிந்து அதற்கு ஏற்றார்போன்று உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இயற்கையாக ஆண்களுக்கு கை, கால், மார்பு போன்ற பகுதிகளில் ரோமம் அதிகம் இருக்கும், அதுவே பெண்களுக்கு அப்படி இருக்காது. அடுத்து ஆண், பெண் குரல் வித்தியாசம்.

நீங்கள் அப்படி ஒரு பெண்ணிற்கான மாற்றத்தை முழுமையாக செய்ய உங்கள் மனதை தயார் படுத்திக்கொண்டு செய்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கு காரணம், மற்றவர்கள் உங்களை சமமாக நடத்தவும், மனதளவில் ஏற்றுக்கொள்ளவும் இந்த மாற்றங்கள் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முழுமையான பால்மாற்று சிகிச்சை என்பது நீங்கள் குறிப்பிடுவது போல் வெறும் அறுவை சிகிச்சை மட்டுமன்றி Facial Feminasation, Speech Theraphy, என அனைத்தும் உள்ளடக்கியதே இது குறித்து பின்வரும் பதிவில் எழுதியுள்ளேன்.
http://livingsmile.blogspot.com/2007/04/blog-post_25.html

மேற்குறிய முறையான மருத்துவம் இந்தியாவில் இல்லாததால், திருநங்கைகளுக்கும் ஆண்களைப் போல தாடை, கை, கால், மற்ற இதர பாகங்களில் ரோமம் வளரும் ஆனால், எல்லோருக்கும் அப்படி கிடையாது. உதாரணத்திற்கு எனக்கு தாடையில் மட்டுமே ரோமம் இருக்கும், கை, கால் மற்ற பகுதிகள் இயற்கையாகவே கிடையாது.

கை கால்களில் ரோம வளர்ச்சி உள்ளவர்கள் வெல்லப்பாகினை காய்ச்சி ரோமம் உள்ள பகுதிகளில் வெதுவெதுப்பாக தேய்த்து காட்டன் துணி ஒன்றினால் ஒத்தி எடுப்பார்கள். துணியுடன் ரோமம் வேருடன் வந்து விடும். சொல்வதற்கு எளிதாக தோன்றும் இது கொடிய வலி நிறைந்தது. இதனை செய்வதற்கென்று தனி ஆட்கள் உண்டு. சில ப்யூட்டி பார்லரிலும் இந்த வசதி உண்டு.

தாடை ரோமத்தை நீக்க சிம்டா என்னும் கிடிக்கி போன்ற சிறு கருவி பயன்படுத்தப் படுகிறது. இதுவும், வலி நிறைந்தது ஆனால் வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டியுள்ளது. தாடை தோல் சற்று மென்மையாக இருப்பதால் ரோமத்தை பிடிங்கும் போது சிறு சிறு காயங்களும் ஏற்படும்.

குரலை மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது. வெகு சிலருக்கு குரல் இனிமையானதாக இயற்கையாகவே அமைவதுண்டு.

கவிதா:- திருநங்கைகள் பொதுவாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் (அ) ஈடுபடுத்தபடுகிறார்கள். இது பணத்துக்காக மட்டுமா?. இல்லை உங்களுக்கும் உடல் தேவைகள் உண்டா?

வானத்திற்கு கீழ் உள்ள அனைத்து ஜீவராசிகளைப் போல திருநங்கைகளுக்கும் உடல் தேவைகள் உண்டு. ஆனால், உடல் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக (மற்ற பெண் பாலியல் தொழிலாளிகள் உட்பட) யாரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை. அதிலும் வேறு வேலை வாய்ப்போ, குடும்ப/சமூக பாதுகாப்போ இல்லாத நிலையில் பிச்சை/பாலியல் தொழில் ஏதோ ஒன்றையே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

தங்களது உடல் மற்றும் ஆன்ம தேவைக்கு அனைத்து திருநங்கைகளுக்குமே ஆண் நண்பர்கள் உண்டு. சிலர் மணமேடை, ரிஜிஸ்டர் ஆபிஸ் இன்றி திருமணமும் செய்து கொள்வதுண்டு. பொதுவில் மட்டும் தங்களை கணவன் மனைவியாக காட்டிக் கொள்வதில்லை.

கவிதா:- நீங்கள் அவள் விகடனில் சொல்லியிருந்த "பிச்சை எடுத்தல்" முறையை உங்களுக்கு பிறகு மாற்ற ஏதாவது செய்தீர்களா? இல்லை ஏதாவது செய்ய முயற்சிகள் செய்து வருகிறீர்களா?

ஒட்டு மொத்தமாக பிச்சை எடுத்தலையே நிறுத்தும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. சட்டம், எங்களுக்கு கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும், தொழில் வாய்ப்பும், பாதுகாப்பும் அளிக்காதவரையில் யாராலும் பிச்சை எடுப்பதையோ/ பாலியல் தொழிலையோ மாற்றவே முடியாது.

கவிதா:- அரசாங்கத்தில் உங்களின் பெயர், பாலினம் போன்ற மாற்றங்கள் செய்ய என்ன வகையான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்காக உங்களின் பங்கு என்ன?

பிப்ரவரி 2006ல் எனது பெயர் (பாலின மாற்றுக்கென எந்த விண்னப்ப படிவமும் கிடையாது) மாற்றத்திற்கு, தலைமை செயலகத்தில் உள்ள எழுத்து மற்றும் பதிப்பு துறை (Gazzette) ஆணையரிடம் விண்ணப்பித்தேன். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட்து. எனவே, உயர்நீதி மன்றத்தில் எனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றித் தரக் கோரி வழக்கு பதித்தேன். அதன் அடிப்படையில் எனது பெயரை (மட்டும்) 12 வாரங்களுக்கும் மாற்றித் தரப் பட வேண்டும் என்ற தீர்ப்பு பிப்ரவரி 2007ல் (கிட்டதட்ட ஒருவருடம்) வந்தது. ஆனால், இன்று வரை (15 வாரங்கள் ஆகிவிட்டது) பெயர் மாற்றித் தரப்பட வில்லை.

கவிதா:- கூத்தாண்டாவர் கோயில் விழா - இதன் நோக்கம், பலன், அவசியமா?

கூத்தாண்டவர் கோயில் திருவிழா

தொண்டு நிறுவனங்களின் நோக்க்கம் : பிசினஸ்,
ஊடகங்களுக்கு : கிளு கிளு செய்தி,
பொது மக்களுக்கு : வித்தியாசமான பொழுது போக்கு,
திருநங்கைகளுக்கு : கெட் டு கெதர்;
என்னைப் பொருத்த வரை : தடை செய்யப்பட வேண்டும்.

கவிதா:- நீங்கள் திருநங்கைகளை பற்றி தவறாக பேசினாலோ, திரைபடங்களில் காட்டினாலோ , தொலைக்காட்சியில் காட்டினாலோ, ஏன் கோபம் கொள்கிறீர்கள்?. அப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களின் விழுக்காடு அதிகமாக கூட இருக்ககிறது இல்லையா?

அதற்கு முன் எனது சில கேள்விகள், இதற்கு பதில் தேவையில்லை நீங்கள் சிந்தித்து பார்த்தால் போதுமானது. இன்று நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல படிப்பும், தொழிலும் இருந்தும் டாகடர், என்ஜினியர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், லஞ்சம், ஊழல்னு கொடி கட்டி பறக்கிறார்களே ஏன்? படிப்பிலையா, பணம் இல்லையா? மக்களின் ஓட்டை வாங்கி மக்களை ஓட்டாண்டிகளாக்கும் அரசியல்வாதிகளிடம் தான் பணம் இல்லையா? சினிமா, பத்திரிக்கை என ஊடகங்கள் ஆபாசத்தை முன்னிருத்தி சம்பாதிக்கிறதே அவர்களிடம் பணம் இல்லையா? இருந்தும் மேலும், மேலும் பணம் சேர்க்க ஆளாய்ப் பறக்கும் இவர்கள் நல்ல்வர்கள்!! கல்வி, வேலை, பாதுகாப்பு, அங்கீகாரம் எதுவும் இல்லாட்டியும் திருநங்கைகள் மட்டும் மகாத்மாக்களாக வாழ வேண்டிய அவசியம் என்ன?

இனி உங்கள் கேள்வி வருவோம் நீங்கள் சொல்வது போல் அப்படிப்பட்டவர்கல் இருக்கிறார்கள் தான். ஆனால், அப்படிபட்டவர்கள் எப்படி அப்படி ஆனார்கள்? அதற்கு யார் காரணம்? இதைப்பற்றி ஒரு படம், ஒரே ஒரு படம் வந்துள்ளதா?

சும்மா உள்ளதை சொல்றேன்னு ஏற்கனவே திருநங்கைகள் குறித்து நிலவி வரும் அவதூறை தொடர்ந்து வளர்த்தெடுப்பதை நாகரீக சமூகம் எப்படி அங்கீகரிக்கலாம்? அல்லது நான்தான் எப்படி பொருத்துக் கொள்ள முடியும்?

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-

1. உங்களுக்கு பிடித்த உடை, அலங்காரம்


ஜீன்ஸ் - குர்தா; லாங்க் ஸ்கர்ட் - குர்தா;

2. உங்களின் நெருங்கிய தோழர்/தோழி

ப்ரியா (இப்ப புனேவில் என்பதால்) எனக்கு நெருங்கிய தோழி/ தோழர் யாரும் இல்லை.

3. உங்கள் குடும்பம் பற்றி

பாசக்கார ஹிட்லர் அப்பா, அம்மா (எனக்கு 4 வயதாகும் போது இறந்துவிட்டார்); சித்தி (என் மூத்த அக்காவை விட 2 வயது இளைய, அப்பாவின் இரண்டாந்தாரம்); அம்மாக்கு இணையா எம்மேல பாசத்தக் கொட்டும் பொறுப்பான மூத்த அக்கா; எல்லா விசயத்திலும் என்னோட போட்டிப் போடும் சின்ன அக்கா; இருவருக்கும் திருமணமாகி, தலா ஒரு பையன் , ஒரு பொண்ணுன்னு செட்டில் ஆகிவிட்டார்கள்; என் மேலும் பாசமும், அபிமானமும் கொண்ட தங்கை;

இவர்களின் கனவுக் கோட்டையை தரைமட்டமாக்கிவிட்ட நான்

4. உங்களுக்கு சமைக்க தெரியுமா? பிடித்த உணவு

சமைப்பேன். ஓரளவிற்கு அட்ஜஸ்ட் பண்ணி சாப்டுக்கலாம். சிக்கன் இன்னும் கொஞ்சம் பெட்டரா சமைப்பேன். எனக்கு பிடிச்சது சிக்கன், சப்பாத்தி, புட்டு, ஆப்பம்.

5. உங்கள் வேலை, அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றி

என் வேலை டேட்டா எண்ட்ரி; சுருக்கம எலக்ட்ரானிக் டேட்ட ப்ராசஸிங் அசிஸ்டெண்ட்; எங்கள் அலுவலகத்தில் 10 ஊழியர்கள் அந்த 10ல் ஒன்று நான் என்பதை தவிர எந்த வித்தியாசமும் கிடையாது;

கூல்!!

6. எழுத்து, சினிமா தவிர உங்களின் பொழுதுபோக்கு

எழுத்து எனது பொழுது போக்கு கிடையாது; வாசிப்பு பிடிதத அளவிற்கு எழுத்து எனக்கு பிடிப்பதில்லை. எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக மட்டுமே எழுதுகிறேன். நடிப்பார்வம், நாடக ஆர்வம், தொடர்ந்து குறும்படம் எடுக்கும் ஆர்வம் என நிறைய உண்டு. இவற்றை தாண்டி இசையை தரிசிக்கவும், சமைக்க கத்துகிட்ட நாள்ல இருந்து சமைக்கவும் ஆர்வம் உள்ளது.

7. உங்களின் கனவுகள்?

நிறைய உண்டு. சும்மா பேர்/பாலின அங்கீகாரம், சமூக அங்கீகாரம்னு போராடுற அவசியம் இல்லாதபடி இந்தியா மாறனும். நல்ல நடிகை, சிறந்த இயக்குநர், என்ற முகவரி.. பிரேசில், ஜமைக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளை சுத்து, சுத்துன்னு நல்லா ஊர் சுத்தனும்.
என்ற கனவு.

8. உங்களுக்கு ஒரு வரம் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த ஒருவராக நீங்கள் மாறலாம். யாராக மாறுவீர்கள்?

தி ஒன் அண்ட் ஒன்லி லிவிங் ஸ்மைல்

9. உங்கள் இசை ஆர்வம், பிடித்த பாடகர்கள், பாடகிகள்

இந்தியாவின் அநேக பாமரர்களைப் போல திரையிசையே எனக்கு வாய்த்த இசையாக இருந்தது. தற்போது, ரெக்கே, கொஞ்சம் ராக் கேட்க ஆரம்பித்துள்ளேன்.

பாடகர்கள் : பாப் மார்லி, ஜிக்கி, லீலா, பி. பி.ஸ்ரீநிவாஸ், ராம்ஸ்டர்ன் (அஸ்ஸே ஜு அஸ்ஸே), ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ் ( ஊடோ சைல்ட்), சக் பெர்ரி (கோ ஜானி கோ), கீதா தத் (தக் தீர்), சுவர்ணலதா, வசுந்த்ரா தாஸ், சுனிதி சௌஹன், ஆஷா பொஸ்லே, கவிதா சுப்ரமணியம், சித்ரா,

10. பதிவர்களில் பிடித்தவர்கள்

பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்னு இல்லைன்னாலும் தொடர்ந்து தங்களது படைப்பை படிக்க வைத்தவர்கள் என்னும் வகையில் உடண்டி நினைவில் வருபவர்கள் :

தல என்னும் பாலபாரதி, பொடிச்சி, துளசி, உஷா, வரவனை, சுகுணா, ராஜ் வனஜ், அசுரன், பொன்ஸ், ஆழியூரான், நரேன், பாஸ்டன் பாலா, மோகன்தாஸ், தமிழச்சி, திரு, செந்தழல், லக்கி, மகேந்திரன்.பெ, பொட்டீகடை, மலைநாடன், குழலி, தருமி, ராம், பாமரன், ஓசை செல்லா.

வித்யா சொன்ன தத்துவம் :- LOVE ALL; CELEBRATE YOUR LIFE;

நிழலாக தொடரும் நிலவு - பாகம் 2

சில வருடங்களுக்கு முன்.......

அனுஷாவின் அண்ணன் சந்துருவின் நண்பனாக அறிமுகம் ஆனவன் தான் ரமேஷ். அனுஷா & சந்துருவும் கல்லூரி சென்றுக்கொண்டு இருக்கும் போது அவர்களுடைய அப்பா மாரடைப்பால் இறந்துபோக குடும்ப பாரத்தை அனுஷாவும், சந்துருவும் சுமக்க துவங்கினர். அனுஷா, சந்துருவுக்கு தங்கையாக இருந்தாலும் நிர்வாக திறமையில் அவனை விட புத்திசாலியாக இருந்தாள். சந்துரு மிகவும் சாதுவான, வாய் திருந்து பேசவே பயப்படும் ஒரு இளைஞன். அனுஷாவும் அப்படியே என்றாலும் அப்பாவின் இடத்தை யாராவது நிரப்ப வேண்டுமே?.

30 வருடங்களாக இந்த குடும்பம் ஒரு சிறிய வீட்டில் (அவுட் ஹவுஸ்) குடியிருப்பதை வைத்தே அவர்களின் குடும்பம் எத்தனை அமைதியான, பிரச்சனை எதுவும் இல்லாத குடும்பம் என்று புரிந்து கொள்ளலாம். வீட்டை விட்டு எங்குமே போயிருந்திடாத பார்வதி அம்மாவை, பிள்ளைகள் இருவரும் அப்பாவின் மறைவுக்கும் பிறகும் அப்படியே வைத்து கொண்டார்கள்.

வெளி உலகம் தெரியாத அந்த அம்மாவிடம் வளர்ந்த பிள்ளைகளும் அப்படியே இருந்தனர். அமைதி, அடக்கம், பேச்சில் நிதானம் என்று எல்லா நல்ல பழக்கத்தையும் கொண்டு எல்லோரிடமும் நல்ல பெயரை மிக எளிதாக பெற்றிருந்தனர்.

சந்துருவிற்கு, நிறைய இல்லாவிட்டாலும் சில நெருங்கிய நண்பர்கள், எப்போதும் வீட்டுக்கு வருவதும் இங்கேயே நேரத்தை கழிப்பதும் வாடிக்கை. அப்படி சிறுவயது முதல் இந்த வீட்டில் இன்னொரு பிள்ளையாக இருந்தவன் தான் ரமேஷ். அனுஷாவின் மீது காதல் வந்ததும், அவன் முதலில் சொல்லியது சந்துருவிடம் தான். சந்துரு சரி என்றால் அனுஷாவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்து சந்துருவிடம் சொல்ல, அவனும் சற்று யோசித்தாலும், ரமேஷ்ஷின் குணம், அன்பு, நேர்மை எல்லாவற்றையும் பார்த்து, சரி என்று சம்மதம் தெரிவித்தான்.

சந்துருவின் சம்மதத்துடன் துவங்கிய இந்த காதல் வருடங்களாக தொடர்ந்தது. காதல் என்றால் இதுவரை சினிமா பீச் என்று சென்றதில்லை. இவர்களின் காதல் அண்ணன் மற்றும் அம்மாவின் எதிரில் தான்.

சந்துருவுக்கும் அனுஷாவிற்கும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தவுடன், இந்த நுங்கம்பாக்கம் வீட்டிற்கு குடிபெயர்ந்தார்கள். இதுவும் வருமானம் அதிகமானதால் எடுத்த முடிவு இல்லை, அவர்கள் வேலைக்கு செல்ல சுலபமாக இருக்கம், அதே சமயம் ரமேஷ்ஷின் மற்றோரு நண்பனின் வீடு இது, அவன் வெளிநாடு சென்று விட வீட்டை இவர்களுக்கு விட்டுவிட்டு சென்றான். இப்படி ஒரு சில காரணங்களுக்காக இங்கே இடம் மாறி இருந்தனர்.

===============


முன் கதையின் தொடர்ச்சி.................

ரமேஷ் சென்றவுடன்............ பார்வதி அம்மாவை சோர்வோடு பார்த்துவிட்டு, அனுஷா அவள் ரூமிற்கு சென்று கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

பார்வதி அம்மா பின்னாலேயே வந்து.... கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தார்கள்.

“அனு......... இப்ப அந்த பொண்ணு வேற மாசமா இருக்கா..... நீயும் இப்படியே பிடிவாதமா இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.”

அனுஷா மெளனமாக சுவற்றையே வெறித்து கொண்டிருந்தாள்.

அவள் கால்களை பிடித்து உலுக்கிய பார்வதி அம்மா.......... “அனு.. உன்னத்தாண்டி...” என்றார்கள்.

சுதாரித்து அம்மாவின் பக்கம் திரும்பியவள், “அம்மா.....மீனா கன்சீவ் ஆவங்கன்னு நான் எதிர்பார்க்கல................ “

“ம்ம்......” அவளின் மனக்கலக்கம் புரிந்தவர்களாய், தனியே யோசிக்கட்டும் என்று வெளியே வந்துவிட்டார்கள்.

===============

ரமேஷ் வீட்டிற்கு சென்று சேர்ந்தான்,

காத்திருந்தவளாக மீனா , அவன் உள்ளே நுழைந்ததும் சத்தம் போட ஆரம்பித்தாள். “ரமேஷ், அனுஷா ! அனுஷா !! ன்னு இன்னும் எவ்வளவு நாள் இருக்க போறீங்க...”

“சாகற வரைக்கும் இருப்பேன்.. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.. நீயும் தெரிஞ்சித்தானே கல்யாணம் செய்துக்கிட்ட?.. ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற..?

"ஆமா சொன்னீங்க அதுக்காக, கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சமாவது என்னை பற்றியும் நீங்க யோசிக்கனும் இல்ல......."

“என்ன யோசிக்காம இருக்கேன்....? எவ்வளவோ சொன்ன பிறகும், அடம்மா..... என்னை கல்யாணம் செய்துக்கிட்டது நீ..... இப்ப என்னை குத்தம் சொல்லாத......."

“சொல்லாம தானே இருந்தேன்.....ஆனா முன்ன மாதிரி இப்ப விடமுடியுமா? நமக்குன்னு ஒரு குழந்தை என் வயத்துல வளர ஆரம்பிச்சிடுத்து...... இதுக்கு அப்புறமும் நீங்க இப்படி மாறாம இருக்கறது நல்லது இல்ல............ “

"ஓ..... இதை காரணம் காட்டி என்னையும் அனுஷாவையும் பிரிக்கலாம்னு இருக்கியா?... அது மட்டும் நடக்காது..... "

“அவ்வளவு தெளிவா இருக்கறவர் எதுக்காக என்னை கர்ப்பமாக்கணும், அனுஷா “உங்க மனசுல இவ்வளவு ஆழமா இருக்கும் போது, என்னை ஏன் தொடணும்?”

ரமேஷ் அவளின் கேள்வியில் அதிர்ந்தான், "அடிப்பாவி...... !! மனச தொட்டு சொல்லு, நானா உன்னை தொடணும்னு உன் மேல் ஆசைப்பட்டு உன் கிட்ட வந்தேன்...... ? "

"சரி நீங்க வரல..... நான் தான் காரணம்னு வச்சிக்கோங்க..நீங்க வேண்டாம்னா வேண்டாம்னு இருக்க வேண்டியது தானே..? ஏன் வந்தீங்க?? “

‘மீனா.. வேண்டாம் மீனா.. இப்படி எல்லாம் பேசி என் மனசை நோகடிக்காத...... ஆனா இப்ப நல்லா உன்னோட வேஷத்தை புரிஞ்சிக்கிட்டேன்..... வேணும்னு என்னை அனுஷாக்கிட்ட இருந்து பிரிக்கனும்னு நீ இந்த வேலையை செய்து இருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்..... ஏன் மீனா.. ஏன் இப்படி செய்த...... ??? , தலையை இரண்டு கைகளாலும் பிடித்து கொண்டு சோபாவில் அப்படியே தொம்' மென்று உட்கார்ந்தான் ரமேஷ்..

மீனா எதுவும் பேசாமல் வேகமாக ரூம்மிற்க்குள் சென்று விட..

ரமேஷ் "இப்படியும் ஒரு பெண் செய்வாளா?" என நம்பமுடியாமல், இனி என்ன செய்வது? இனி இவளை எப்படி சமாளிப்பது ? என்று யோசிக்கலானான்.

நிழல் தொடரும்........................

Hel(l)met ட்டினால் எனக்கு வந்த பிரச்சனைகள்..

அன்பான நெஞ்சங்களுக்காக..:- ஈமெயில் மூலம் தலைப்பை மாற்ற கூறி, அன்பாக பாசத்துடன் கடித்துக்கொள்ளும் அனைவருக்காகவும் தலைப்பை மாற்றியிருக்கிறேன்...

ஆமாம், 1993-94 லிருந்து சென்னை மாநகரத்தில், அண்ணாசாலை உட்பட பல இடங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்று வந்து கொண்டு இருக்கிறேன். இது நாள் வரை இல்லாத பயம் இப்போது வந்துவிட்டது.

காரணம் Hel(l)met தான். ஆமாம் , ஜீன் 1 லிருந்து Hel(l)met போடவேண்டும் என்பதால் நேற்று கணவரை வருத்தி, கடைக்கு அழைத்து சென்று ஒரு Hel(l)met வாங்கி அதை இன்று அணிந்து வந்தேன். வீட்டில் Trail பார்க்கும் போதே கணவரும், மகனும் அடித்த கமெண்ட் காதில் விழவில்லை. சரி காது கேட்காமல் சாலையில் நான் போகும் வேகத்திற்கு இனி எனக்கு சீக்கிரம் சங்கு தான் என்பதை உணர்ந்து, என் கணவரிடம் அவரின் ‘visiting card’ ஒன்று வேண்டும் என்று கேட்டேன், அவரோ “இத்தனை நாள் இல்லாமல் ஏன் இன்று மட்டும் கேட்கிறாய்? “ என்றார். நானும் இதுநாள் வரையில் தினமும் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது, இன்று இந்த Hel(l)met என்னை திரும்பி வீட்டிற்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. அனாதையாக சாலையில் கிடக்காமல், உடனே உங்களுக்கு தகவல் சொல்லுவார்கள் அல்லவா?.. என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னேன். அவரும் என்னுடைய புத்திசாலி தனத்தை மெச்சி, visiting card’ கொடுத்தார்.

சரி, முதலில் Hel(l)met நன்மையை பார்க்கலாம் :-

1. வேகமாக செல்லும் பழக்கம் இருப்பதால், காற்றின் வேகம் தாங்காமல் கண்களிலிருந்து தண்ணீர் வரும். Hel(l)met டினால் அந்த பிரச்ச்னை இல்லாமல் இருந்தது.

இந்த ஒன்றை தவிர நான் நன்மையாக எதையும் உணரவில்லை

சரி, இப்போது Hel(l)met ட்டினால் அனுபவித்த பிரச்சனைக்கு வருவோம்.

1. அணிந்தவுடன் காது சரியாக கேட்கவில்லை. அதனால் அக்கம் பக்கம் வரும் வாகனங்களின் சத்தம் கேட்கவேயில்லை.

2. வண்டி ஓட்டும் போது ஒரு மயான அமைதி. எனக்கு சந்தேகம், நாம் சென்னை சாலையில் தான் வண்டி ஓட்டுகிறோமா?

3. அதிகமான கணம், முன்னரே தலைகணம் அதிகம் அதனுடன் இதுவும் சேர்ந்து., காலையிலேயே தலைபாரமாக இருந்தது.

4. எல்லோரும் (பெண்கள்) எதையோ சுற்றி சுற்றி உடம்பை மறைத்து (வெயிலுக்காக) வருகிறார்களே நாமும் அப்படி செய்வோம் என்று ஒரு பழைய துப்பட்டாவை தலையில் சுற்றி Hel(l)met ஐ அணிந்ததால், இந்த துணி என்னவோ ராஜா , ராணி க்கு எல்லாம் பின்னால் ஒரு அங்கி பறக்குமே அதுபோல் பறந்து வந்தது. அதனால், நிறைய பேர் என்னை திரும்பி திரும்பி பார்த்தார்கள்.

5. நடுநடுவே காற்றில் விலகும் என்னுடைய உடையை சரிப்பார்க்க/சரி செய்துக்கொள்ள முடியவில்லை.

6. சிக்னலில் நிற்கும் போது, பின்னால் வந்து நிற்கும் வண்டிகளின் சத்தத்தை உணரமுடியாமல், இன்றே ஒரு சைக்கிள், ஒரு ஆட்டோ பின்னாலிருந்து என் வண்டியை மோதின.. அவர்கள் மோதின பிறகு தான் திரும்பி பார்த்து கொஞ்சம் முன்னால் சென்றேன்.

7. எல்லாவற்றிக்கும் மேல், 60- 70 கிமி வேகத்தில் செல்லும் நான் 30-40 கிமி வேகத்தில் சென்றதால் என்னுடைய பயண நேரம் அதிகமானது.

8. என்னுடைய black bird (Honda Activa) முன்னமே சத்தமில்லாமல் ஓடும்.. இப்போது ஓடுகிறதா நின்றுவிட்டதா என ஒன்றுமே தெரியவில்லை.

9.அலுவலகத்திற்கு சென்று Hel(l)met ஐ கழட்டியவுடன், தலை எல்லாம் கலைந்துவிட்டது. அலுவலகத்தில் உள்ளே நுழைந்ததும் என் தலைவிரி கோலத்தை பார்த்து சிலர் பயந்து அலறினர்.

ஒரு சாதாரண Hel(l)met ட்டினால் ஒரு மனுஷிக்கு இத்தனை பிரச்சனையா?. படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து, என் உயிர் மேல் இரக்கம் கொண்டு, என்னுடைய பிரச்சனைகளை எப்படி சரிசெய்து கொள்வது என்று சொல்லவும்.

அணில் குட்டி அனிதா:- கவி.. உங்களுக்கு தான் தலையில ஒன்னுமே இல்லையே..... இல்லாத ஒன்னுக்கு எதுக்கு இத்தனை சிரமம்/பாதுகாப்பு?. ஏதோ தலையில இருக்கறவங்க தலைய பாதுகாக்கனும்னு நினைப்பாங்க.. உங்களுக்கு அவசியமே இல்ல..... ஏதோ இருக்கறவங்க சொன்ன கேட்டுக்கோங்க.......

[மக்களா.. என்னை கவிக்கிட்ட இருந்து காப்பாதுங்க...... நீங்க என்ன நினைக்கறீங்களோ..... அதை தான் நான் சொல்லியிருக்கேன்.... அதனால என்னை காப்பாத்துங்க..........]

பீட்டர் தாத்ஸ் :- Many people have a good aim in life, but for some reason they never pull the trigger.

நிழலாக தொடரும் நிலவு

டூ விலரிலிருந்து இறங்கிய அனுஷாவின் முகத்தில் சோகம் அப்பி கிடந்தது. ரமேஷ் இடம் எதுவும் பேசாமல், தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடந்தாள்...

ரமேஷ் வண்டியை பார்க் செய்து கொண்டே அவளையே பார்த்தான்...

அவள் திரும்பவில்லை......

பெருமூச்சுடன் தெருவிலேயே சிறுது நேரம் நின்றுவிட்டு.....பேசித்தானே ஆகவேண்டும்.. என்று வீட்டுக்குள் நுழைந்த ரமேஷின் முகம் இறுகி, சிவந்து கிடந்தது.

அனுஷா...நேரே ரூமுக்குள் சென்று ஹேன்ட் பேகை வைத்துவிட்டு, அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.. “அம்மா.. சூடா காஃபி தரியா.. ரமேஷ்’சும் வராரு அவருக்கும் சேர்த்து போடு..”

ரமேஷ் கேட்டுக்கொண்டே ஹால் சோபாவில் சோர்வாக உட்கார்ந்தான்......ஏன் இந்த பொண்ணு இப்படி நம்மை இம்சை கொடுக்கிறா......?!! மனசுக்குள் பேசிக்கொண்டான்.

-------------------------------------------------------------------------------
அது ஒரு முன்று அறைகள் அட்டேச்ட் டாய்லெட் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, அனுஷா வீட்டையும் சேர்த்து மொத்தம் 2 வீடுகள் ஒரு தளத்தில் இருந்தன, மொத்தம் 8 வீடுகள். இவர்கள் முதல் தளத்தில் இரண்டாவது வீட்டில் இருந்தனர்.

மூன்று அறைகளில் ஒன்று அனுஷா’வுடையது, மற்றதில் ஒன்றில் அவளின் அண்ணன் சந்துரூ’ வும் இன்னொன்றில் அவளின் அம்மா பார்வதியும் இருந்தனர்.
இதை தவிர ஒரு டைனிங் அட்டேச்ட் மெயின் ஹால், கிட்சென், ஒரு சின்ன சாமி அறை, காமன் டாய்லட், காற்றோட்டமான தெருவை பார்த்த பால்கனி.

--------------------------------------------------------------------------------

முகம் கழுவி துடைத்துக்கொண்டே ரூமை விட்டு வந்த அனுஷா.. ரமேஷை பார்த்தாள்.....” என்ன மனசுக்குள்ளையே திட்டறீங்களா?.. ரூம்ல டவல் வச்சி இருக்கேன்.. முகம் கழிவிட்டு வாங்க..” புன்முறவலோடு கிட்சென்க்குள் சென்றுவிட்டாள்.

கிட்சென்னில் பார்வதியம்மா காப்பியை ஆற்றிக்கொண்டே “என்னடி..சண்டையா?..”

“இல்லமா.. கல்யாணம் பத்தி பேசவேண்டாம்னு சொல்றேன் திருப்பி திருப்பி அதை பத்தியே பேசி...............................வேற ஒன்னும் இல்ல............”

ரமேஷ்................... “தோசை செய்யறேன்.. தொட்டக்கறத்துக்கு என்ன வேணும்.. சொல்லுங்க....”அனுஷா கிட்சனிலிருந்து குரல் கொடுத்தாள்.

“இல்ல காப்பி போதும்........ நான் கிளம்பறேன்.. மீனு..வெயிட் பண்ணுவா..”

கிட்சென்லிருந்து எட்டி ரமேஷை பார்த்தாள்.....”எப்படியும் நீங்க வீட்டுக்கு போக இரண்டு மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் பசிதாங்க மாட்டீங்க.. சாப்பிட்டுட்டு போங்க.....”

“ஏண்டி ! ஒன்னுமே நடக்காதது மாதிரி இப்படியே எவ்வளவு நாள் நீ இருக்க போற....”. ரமேஷ் குரலை உயர்த்தி கத்தினான்..

“கதவு திறந்து இருக்கு ரமேஷ்”..............அனுஷா திறந்திருந்த கதவை கண்களால் சுட்டி காட்டினாள்.

ரமேஷ் வேகமாக எழுந்து..கதவை அடித்து சாத்தினான்..

“ஆண்ட்டி..! அவ நடந்துகறதையும் பேசறதையும் பாத்திங்களா.. இவளால நான் தினம் தினம் சாகறேன்.. கொஞ்சமாவது என்னைப்பத்தி நினைக்கறாளா..? இவள பாக்க பாக்க எனக்கு ஏன் நான் உயிரோட இருக்கேன்னு தோனுது.. “

“இப்பத்தான் மீனு வெயிட் பண்ணுவா’ ன்னு சொன்னீங்க.. அதுக்குள்ள சாகறத பத்தி பேசறீங்க..?!! “ அனுஷா சிரித்தாள்..

“ஏண்டி என்னை இப்படி கொல்ற.....”

“மீனு மட்டும் இல்ல.. இப்ப குட்டி ரமேஷ் வேற வெயிட்டிங்........” .அனுஷா சந்தோஷத்துடன் சொன்னாள்.

அதிர்ச்சியான பார்வதியம்மா இவளை உள்ளே இழுத்தார்..... “அனு..நெஜமாவா?.. என்னடி சொல்ற..?? “

“ஆமாம்மா.. வரும் போது தான் சொன்னாரு..........”

“என்னடி இப்படி செய்துட்டாரு...... இனிமே என்னடி பண்றது....” பார்வதியம்மா குரலில் கவலை தோய்ந்து இருந்தது.

“இதுக்கு முன்னாடி மட்டும் நாம என்ன செய்ய முடிஞ்சிது .............??”

பார்வதியம்மா’வும், அனுஷாவும் கிட்செனை விட்டு வெளியில் வந்தார்கள்,

அனுஷாவிடமிருந்து காப்பியை வாங்கி கொண்ட ரமேஷ், ஆண்ட்டி என்ன கேட்க போகிறார்களோ என்று அவரின் முகத்தையே பார்த்தான்.

“என்ன ரமேஷ், அனு சொல்றது...............”பார்வதியம்மா இழுத்தார்கள்..

“ஆமா..ஆண்ட்டி!................. மீனு மாசமா இருக்கா.. நெத்திக்கு தான் கன்ஃபார்ம் ஆச்சி........”

“என்ன ரமேஷ்..... நீங்க சொன்னது எல்லாம் என்ன ஆச்சி....” .கவலையுடன் பார்வதியம்மா கேட்க..........

........................................ரமேஷ் மெளனம் சாதித்தான்....................

அனுஷா இடைமறித்து.. “அம்மா... என்னமா நீ?.............விடு..விடு அவரை எதுவும் கேட்காதே ..... ரமேஷ் கேட்டேன் இல்ல.. தொட்டுகறத்துக்கு என்ன வேணும்..”

“ஏதாவது செய்...................”

பார்வதியம்மா.. அவருடைய ரூம்மிற்குள் சென்றுவிட..அனுஷா. .டிபன் செய்ய கிட்சென்க்குள் சென்றாள்.

ரமேஷ்ஷும் பின் தொடர்ந்தான்....

“அனு.!. ஏன் அனு நீ கூட என்னை புரிஞ்சிகலையா? “

“ம்ம்..நல்ல புரிஞ்சிக்கிட்டேன்..........அதான்...மீனா மாசமா இருக்காங்ளே..............”

“அனு..அது.. வந்து..............கல்யாணம் ஆன நடக்கற ஒரு சாதாரண விஷயம்.... “

“ஓ................சாதாரண விஷயம்.........” அனுஷா கரகரத்த குரலில் இழுத்தாள்..

“அனு..............”

“ப்ளீஸ்...ரமேஷ்....நாம இதை பத்தி பேச வேண்டாம் நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க..”

“அனு.......................”

“ஹால்’ல போய் உட்காருங்க.. வாங்க..இங்க..” விடுவிடுவென்று ஹாலுக்கு அவனை இழுத்து வந்துவிட்டு, டிவி யை ஆன் செய்து..... ரிமோட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்.

ரமேஷ், டிவியை ஆஃப் செய்துவிட்டு திரும்பவும் கிட்சனுக்கு வந்தான்......

“அனு.............................”

அனுஷா தேங்காயை சிறு துண்டுகளாய் வெட்டிக்கொண்டே”............ம்ம்....”

“என்னை நீயும் புரிஞ்சிக்கலையா? “

நிமிர்ந்து............அவனை நேராக பார்த்தாள்................

அவளின் பார்வையை சந்திக்க முடியாமல்.....முகத்தை கவிழ்த்தான் ரமேஷ்...

திரும்ப தேங்காய் வெட்டுவதை தொடர்ந்த அனுஷா.. “ரமேஷ்..இப்ப புரியுதா.. என்னை உங்களால நேராக்கூட பாக்க முடியல..........நீங்க என்க்கிட்ட இப்படி இருக்கனும்னு நான் நினைக்கல...... உங்களை இப்படி பார்க்கவும் பிடிக்கல.....கல்யாணம் ஆயிடுத்து, இப்ப குழந்தையையும் வர போகுது..... சந்தோஷமா இருங்க..

.............................

“என்னை விட்டுடுங்க.. நான் இப்படியே இருக்கேன்.. இன்னொருத்தர கல்யாணம் செய்துக்கிட்டு, நிச்சயமா...புள்ள எல்லாம் என்னால பெத்துக்க முடியாது...........உங்களுக்கு கல்யாணம் ஆகி 4 மாசம் ஆச்சி..... நான் நல்லாத்தானே இருக்கேன்.. அப்படியே எப்பவும் என்னால இருக்க முடியும்..”

“அனு.....அறிவில்லாம பேசாத.. நீ இப்படி இருந்தா நான் எப்படி நிம்மதியா இருப்பேன் சொல்லு.. எனக்காக எனக்காக ன்னு சொல்ற.. என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா? “

திரும்பி ரமேஷ்ஷை உற்றுப்பார்த்தாள்...... “எது உங்களுக்கு நிம்மதி..... நான் கல்யாணம் செய்துக்கறதா?.. ஏன் இத்தன சுயநலமா இருக்கீங்க..? நீங்க கல்யாணம் செய்துக்கிட்டதால நான் நிம்மதி இல்லாம இருக்கேனே..அது தெரியலையா உங்களுக்கு?................”

ரமேஷ்ஷின் செல் சினுங்கிது........

நம்பரை பார்த்துவிட்டு, போனை ஆன் செய்து காதில் வைத்தான்.. இறுக்கமான குரலில்....”சொல்லு...........”

....................................

“இங்கத்தான் நுங்கபாக்கத்தில் இருக்கேன்.. “

....................................

“இன்னும் ஒன் ஹவர்ல அங்க இருப்பேன்....”

....................................

“அனுவை ட்ராப் பண்ண வந்தேன்..”

....................................

“இல்ல.....அவளுக்கு தனியா போக தெரியாது.. நான் தான் கூட்டிட்டு வரணும்... “
....................................

“அவளுக்கு என்னை விட்டா யாரும் இல்ல... “

.......................................

“இங்க பாரு மீனா..நீ சொல்ற படி எல்லாம் என்னால இருக்கமுடியாது............... நான் என்ன செய்யனும்னு நீ சொல்லாத.............”

அனுஷா.. வேகமாய் வந்து ரமேஷ்ஷின் செல்’லை பிடுங்கி கட் செய்தாள்.....

ரமேஷ் ! “உங்க மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க?.. என் மேல இருக்கற கோவத்தை ஏன் அவங்கக்கிட்ட காட்டறீங்க..? .அவங்க மாசமா இருக்காங்க. .இப்ப போயி அவங்க கிட்ட இப்படி எல்லாம் பேசிக்கிட்டு.....சாஃப்ட்டா பேசுங்க ப்ளீஸ்.....”

போன் திரும்பவும் சினுங்கியது...

“ம்ம்..சொல்லு மீனா........”

..................................

“இல்லமா........... நான் கட் பண்ணல...”

....................................

“தெரியலமா.. தானா தான் கட் ஆயிடுத்து..”

....................................

“இல்லமா நீ பண்ணுவேன்னு நான் பண்ணல...”

....................................

“இதோ..கிளம்பிட்டேன்.. வந்துடறேன்.. வீட்டுக்கு வந்து பேசறேன்.. “

....................................

“மீனு..... சொல்றேன் இல்ல....................வந்துடறேன்ன்னு சொல்றேன் இல்ல..”

....................................

“ரமேஷ் அனுஷாவை வேதனையோடு பார்த்துக்கொண்டே”

.......................
“ம்ம்..சரி’

.........................

“சரி..வரேன்”

...................................

“இல்ல...நீ தான் முக்கியம்”

............

“ம்ம்......... தெரியும்”

....................

“சரி”

..............

“இன்னையோட லாஸ்ட்”

......................

“சரி”

...........................

போனை நிறுத்திய போது அவன் கண்கள் கலங்கியிருந்தது.............. சிறிது நேர மெளனத்திற்கு பின்............

“அனு.......! தப்பு நான் மட்டும் பண்ணல .....என்னைக்கு நான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கறேன்ன்னு சொன்னேனோ அன்னைக்கே நீ உறுதியா வேண்டாம்னு சொல்லியிருக்கனும்................. நீ மட்டும் அப்படி சொல்லியிருந்தா......”

இடைமறித்தாள் அனுஷா.. “சொல்லியிருந்தா..? நான் சொல்றத நீங்க கேட்டு உடனே.. என்னை கல்யாணம் செய்துக்கிட்டு இருப்பீங்க இல்ல............”

“இல்ல அனு.. வேற ஒருத்திய கல்யாணம் செய்துக்கொள்ளாமல் இருந்து இருப்பேன்.........”

“பழசை பேசி உங்கள் டைம்யும் வீணாக்காதீங்க என்னோட டைம்யும் வீணாக்காதீங்க.. இத பத்தி நிறைய நாம பேசிட்டோம்.... அதுவும் மீனா மாசமா இருக்கும் போது.. இப்ப அதை பேசி ஒரு பிரயோசனமும் இல்ல..........”
சரி.. ரமேஷ், .”....இன்னொரு விஷயம்............நாளையிலிருந்து நீங்க வரவேண்டாம்..நான் தனியா வர பழகிக்கிறேன்.. முடிஞ்சா வண்டி வாங்கிக்கிறேன்.........”

ரமேஷ் அதிர்ந்தான்...........”அனு!! .....ஏன்??...........உன்னை தனியா எல்லாம் விட முடியாது.............. .”

“விடனும்.....”

“முடியாது அனு.. நான் மீனாவை சமாளிச்சிக்கிறேன்.......”

“வேணாம்.......ரமேஷ். தனியா வர நான் பழகித்தான் ஆகனும் .....வரவேண்டாம்னா வேணாம்..”

“இல்ல நான் வருவேன்......................”

திரும்ப திரும்ப பேச விரும்பாமல், அனுஷா..டிபனை டைனிங்க்கு கொண்டு சென்றாள்.

ரமேஷ்.......................... ! “சாப்பிட வாங்க”. ........

முறைத்துக்கொண்டே வந்தான்... அனுஷா வாயை திறக்கவில்லை..........மெளனமாக இருவரும் சாப்பிட்டார்கள்...............

ரமேஷ் கிளம்பினான்..... அனுவை பார்த்து...... “நீயும் எனக்கு செய்த ப்ராமிஸ் எல்லாம் மறந்துட்டு மாறிக்கிட்டே வர...................... செத்து போயிடுவேண்டி.. ‘

.......................... அனுஷா மெளனம் சாதித்தாள்

ரமேஷ்ஷின் சத்தத்திற்கு பார்வதியம்மா உள்ளிருந்து வந்தார்கள்.......’அனு..என்ன ஆச்சி..??..... ரமேஷ், நீங்க கிளம்புங்க.. அவ இப்படித்தான்னு உங்களுக்கு தெரியாதா? “

ரமேஷ்.....”டேக் கேர்.............. மீனாக்கிட்ட பிரச்சனை எதுவும் வேணாம்.. திச் ஈஸ் யுவர் ப்ராமிஸ் ஆன் மீ............” .அனுஷா அவன் கண்களை பார்த்து ஒவ்வொரு வார்தையாக சொன்னாள்

....................... ரமேஷ் அனுஷாவின் பார்வையை தவிர்த்து..........................”ஆண்ட்டி வரேன்.................”

“வரவேண்டாம்னு சொன்னேன்............” அனுஷா வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தாள்..

‘வருவேன்...................................” ரமேஷ்ஷும் அதே அழுத்தத்தில் சொல்லிவிட்டு சென்றான்........


நிழல் தொடரும்....................

கலைஞர் குடும்பம் - பாருங்க தெளிவாயிடுவீங்க!

அணில் குட்டி அனிதா:- பாருங்க பாருங்க.. எவ்வளவு Clear ஆ படம் போட்டு காட்டி இருக்காங்க. .நம்ப நண்பர்கள்..

கவிதாக்கு நேத்திக்கு ஈமெயில்ல வந்துதுங்க.. நான் சுட்டுட்டேன்.. :)))



படத்தை கிளுக்குங்க...பெருசா தெரியும்..

பீட்டர் தாத்ஸ் :- Team work is working together even when apart

கேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - நாகை சிவா

அணில் "தெம்புடன்" ஆரம்பிச்சி, தனியா போயிடுத்து, எனக்கு கொஞ்சம் நிம்மதியே.. இல்லையென்றால், நடு நடுவே நக்கல் செய்து என்னை எரிச்சல் செய்து கொண்டு இருக்கும்.

இன்று நம்முடன், கேப்பங்கஞ்சி' யை குடிக்க வந்து இருப்பவர், அணிலிடமிருந்து தப்பத்து போன சிவாவே!!.. தப்பித்தவரை தடுத்து நிறுத்தி, கேப்பங்கஞ்சி' க்கு அழைத்து வந்துள்ளேன்.

வாயை புடுங்கற ரவுண்டு:-


கவிதா:- வாங்க சிவா.. எப்படி இருக்கீங்க..?

நல்லா இருக்கேன் கவிதா, அது என்ன வாய புடுங்குற ரவுண்டு.... வாயில் இருந்து வார்த்தைகளை தானே புடுங்குறீங்க. அப்ப அது வார்த்தை புடுங்குற ரவுண்டு தானே!

கவிதா:- உங்களுடைய பதிவில் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டி எழுதறீங்க, ரொம்ப சீரியஸான விஷயத்தை கூட சாதாரணமாக சொல்லிடறீங்க..எப்படி இது? குறிப்பா எனக்கு எல்லாம் இப்படி சுட்டு போட்டாலும் வராது

இது நக்கலா, பாராட்டானு எனக்கு தெரியல. எந்த ஒரு விசயத்தையும் ஒழுங்கா எழுதுவது இல்லை, நாய் வாய் வைத்த மாதிரி எல்லாத்திலும் வாய் வைக்குறேன்னு சொல்ல வறீங்க அப்படி தானே? எந்த விசயத்தையும் சீரியஸா எடுத்துப்பது இல்லை, அதான் சாதாரணமாக வந்து விடுகிறது, போல. உங்களுக்கு மட்டும் இல்லை, யாருக்குமே சு(ட்)டு போட்டா வராது. தோணுறதை எழுதுறேன், அதான் என் பதிவுகே ஏதோ சொல்கிறேன் என்று வைத்து உள்ளேன்.

கவிதா:- அடுத்து நகைசுவை, நக்கல்...நான் சொல்லவே வேணாம்.. கலக்கறீங்க.. குறிப்பா.. பதிவை விட பிற பதிவர்களின் எழுத்துக்களுக்கு உங்களின் மறுமொழிகள் நன்றாகவும், நகைசுவையாகவும் உள்ளது.. இதைப்பற்றி-

மகிழ்ச்சிங்க, ஆக என் பதிவுகள் சுமார்னு சொல்லிட்டீங்க. அடுத்தவர்கள் பதிவில் போடும் போது நம் மறுமொழி அப்பதிவரையோ, மற்ற பதிவர்களையோ ஒரு புன்முறுவல் பூக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக இருக்கலாம்.

கவிதா:- நிறைய பதிவர்களிடம் கேட்ட கேள்வி, இருந்தாலும் உங்களிடம் கேட்டு, கிளர ஆசை. MNC ல வேலை செய்கிற நான் இந்த கேள்வியை கேட்க கூடாதுன்னு நீங்க சொல்லலாம், ஆனால் அதற்கு சரியான காரணத்தை பிறகு சொல்லுகிறேன். கலாம் அவர்கள் இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கின்றது என்று பெரும் நம்பிக்கையில் இருக்கிறார், ஆனால் இளைஞர்கள் நம்பிக்கை கனவுகளோ படித்துமுடித்தவுடன் வெளிநாடு சென்று விட வேண்டும் என்பதே.. ஏன்? பணம் சம்பாதிக்க என்ற பதிலை தவிர வேறு சொல்லுங்கள். பணம் சம்பாதிக்க இங்கேயே நிறைய வழிகள் உள்ளன. (நேர்மையாக)

நீங்க என்ன காரணம் வச்சு இருக்கீங்கனு எனக்கு தெரியல. சொல்லுங்க பாக்கலாம். சரியா நேரடியாகவே பேசலாம்.
நம் நாட்டு இளைஞர்கள் வெளிநாடு போவதால் இந்தியாவிற்கு நட்டமா, லாபமா சொல்லுங்க? நட்டம் இல்லை என்று கூற வில்லை. அந்த நட்டத்தை ஈடு செய்யும் விதமாக லாபம் வருகிறது என்பது தான் உண்மை. உலக நாடுகள் பொருளாதார தடை விதித்த போது அதை தைரியமாக எதிர்த்த நிக்கும் துணிவை கொடுத்தது என். ஆர். ஐ. களை நம்பி தான். சிம்பிள் லாஜிக், உலகத்தில் இருக்குற அத்தனை கம்பெனியும் இந்தியாவில் தொழில் தொடங்க விட்டாச்சு. அவர்களுக்கு நம் மக்கள் உழைத்து கொடுத்து காசாக்கி அதை அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்புவதை விட நாங்க இங்க இருந்து உழைத்து பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறோம். மருத்துவம், விஞ்ஞானிகள் பெரும் அளவில் வெளியெறுவது சிறிது வருத்தமான விசயம் தான். அதே போல பெரும்பாலோனார் சூழ்நிலையின் காரணமாக அங்கே தங்கி விடுவதிலும் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால் இப்பொழுது நிலைமை மாறுகின்றது, நம் இளைஞர்கள் வெளிநாடு வாய்ப்புகளை மறுக்க தொடங்கி விட்டார்கள். அவ்வளவு ஏன் ஆன் சைட்டை மறுக்கும் நண்பர்கள் எனக்கு பலர் இருக்காங்க. நான் போனதுக்கு காரணம் என் குடும்பத்தின் நிலை போதுமான அளவில் இருந்தாலும் என் ஜெனேசரனில் இன்னும் ஒரு அளவு மேலே உயர்த்த வேண்டும் என்ற சுயநலத்தால் தான். எனக்கு இருக்கும் கனவுகளை நிறைவேற்றுவதற்குகான பொருளையும், அனுபவத்தையும் சேர்க்கவும் தான். அங்கு நம் மக்கம் போவதற்கு 90% பணம் என்பது தான் துணிவு. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், எங்கு இருந்தாலும் நாங்கள் இந்தியர்கள், இந்தியாவை பற்றி தான் எங்கள் எண்ணம் இருக்கும். விரிவாக பேச வேண்டிய விசயம், பேசலாம் எதிர்காலத்தில்.

கவிதா:- பெண்கள் தினம், அன்னையர் தினம் போன்ற தினங்களுக்கு வாழ்த்துக்களும், தனி பதிவும் போட்ட வெகு சில தோழர்களில் நீங்களும் ஒருவர். ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா?

அப்படி எல்லாம் இல்லை. அந்த சமயத்தில் பதிவு போட எண்ணம் தோன்றிய காரணத்தால் போட்டு இருக்கலாம். எனக்கு இது மாதிரி வகைப்படுத்தி எல்லாம் ரொம்ப யோசிக்க முடியாது. இப்படி போட்டுமே ஆண்கள் என்னும் மிருகம், MCP எல்லாம் சொல்லுறாங்க, போடலைனா என் நிலைமை ரொம்ப மோசம் தான் போல்.

கவிதா:- மனதை நடுங்க வைத்த சுனாமி, நாகை மாவட்டம் அதிகபட்சமாக தாக்கப்பட்டது, நாகை மாவட்ட இளைஞனாக வங்காள விரிகுடாவை திட்டியதை தவிர உங்களின் பங்களிப்பாக ஏதாவது செய்தீர்களா?

வங்காள விரிகுடாவை திட்டினேனா? கிடையவே கிடையாது, கோபம் ஏற்பட வில்லை, வருத்தம் உண்டு, உன்னையே எல்லாம் என்று இருந்தவர்களை உன்னால் எப்படி அழிக்க முடிகின்றது என்ற வருத்தம் தான். இந்த இயற்கையின் பேரழிவுக்கு ஒரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம் என்ற ஒரு எண்ணம் வந்ததும் உண்டு.

பங்களிப்பு என்று பார்த்தால் பெரிதா ஒன்னும் இல்லங்க. சுனாமி ஏற்பட்ட அன்றும், பிறகும் சுமார் 70 % மேல் மக்கள் ஊரை காலி செய்து போன போதும் என்ன ஆனாலும் இங்கு தான் என்று உறுதியாக அங்கு தங்கியதை சொல்லாம். முதலில் சுயநலத்துடன் நம் குடும்பத்திற்கு ஒன்றும் ஆக வில்லை என்று தெளிவான பிறகு நண்பர்கள் நல்லா இருக்கார்களா என்று பார்க்க விரைந்தோம். சில நண்பர்களுக்கு உதவினோம் பணத்தால், உடையால், உணவால், மனத்தால், பொருளால். உதவிகள், ராணுவம் அனைத்தும் விரைவில் வந்ததால் எங்கள் உதவி உயிர் நீத்தோர் உடல்களை அகற்ற அவ்வளவாக தேவைப்பட வில்லை. வெளி ஊர், மாநிலம், நாடு போன்ற இடங்களில் வந்தவர்களுக்கு எங்களால் முடிந்த அளவு சரியான தகவல், போக வேண்டிய இடத்திற்கு உதவி, தங்க உதவி, வரும் பொருள் உதவிகளை கலெக்டர், டி.ஆர்.ஒ போன்ற அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சரியான இடத்தில் சேர்ப்பது போன்ற பங்களிப்பை மற்றும் தான் வழங்க முடிந்தது. வெளி நண்பர்கள் என்னை தொடர்புக் கொண்டு உதவி புரிய முன்வந்ததும் தேவைக்கு அதிகமாக நாகைக்கு உதவி வந்து சேர்ந்ததால் முதல்வர் நிவாரண நிதிக்கு திசை திருப்பி விட்டேன். பதற்றம், மனதளவில் ஏற்பட்ட அழுத்தம், தெளிவு இல்லாமை போன்றவற்றால் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இன்னும் உண்டு.

கவிதா:- தமிழ்மணம், நாம் எல்லோரும் நண்பர்களாக ஆன இடம், ஆனால் அதிகமான அரசியல் சாதி, மத சண்டைகள், பெண்களை குறிவைத்து அசிங்கப்டுத்தும் ஒரு கும்பல், ஒருவரின் எழுத்தையும், சிந்தனையையும் முடிந்தவரை விமர்சனம் செய்யும் பதிவுகள் அதிகமாக உள்ளன. மாற்றம் வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஒன்னும் பெரிதாக செய்ய வேண்டாம், கண்டு கொள்ளாமல் இருங்கள், நேரமும், பொறுமையும் இருந்தால் எதிர்த்து குரல் கொடுங்கள். நீங்கள் சொன்னவர்கள் பற்றி ஒன்றே ஒன்று தான் - அவர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு. த.ம. தற்சமயம் மேற்கொண்டு இருக்கும், சில நடவடிக்கைகள் பயன் தரும் என்று எண்ணுகிறேன்.

கவிதா:- திரைவிமர்சனம் நிறைய எழுதறீங்க. தேவையா?..

தேவை, தேவையில்லை அப்படினு பகுத்தறிய ஆரம்பித்தால் நான் எல்லாம் பதிவே போட முடியாது. நான் பெரும்பாலும் நல்ல தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதுவது இல்லை. நல்ல படம் வருதா என்று கேள்வி எழுப்பக் கூடாது. மொழி போன்ற நடுத்தர வகைப் படங்களையே தலையில் வைத்து கொண்டாடும் நிலைமையில் இருக்கிறோம், சரி இதை அப்பாலிக்கா பாக்கலாம். நான் பார்த்து நொந்த படங்களுக்கு தான் விமர்சனம் எழுதி வருகிறேன். நிறையாவா போட்டு இருக்கேன்? தமிழ் படங்களுக்கு ஒரு 4 விமர்சன பதிவு எழுதி இருக்கேன், ஒரு பதிவு ஆங்கில திரைப்படங்களுக்காக விமர்சனம் எழுதி இருக்கேன், அம்புட்டு தாங்க. என்ன பண்ணுறது, சினிமாவை கண்டே வளர்ந்த மற்றும் ஒரு தமிழன் தானே நானும். இருந்தாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்ள முயல்கின்றேன்.

கவிதா:- மொக்கை பதிவுகள் எழுதுவதோடு இல்லாமல், அனானிகளை அவிழ்த்து விட்டு ஆட்டம் போடும் பதிவர்களுக்கு உங்களின் நல்ல /சிறந்த ஆலோசனைகள் சில-

மொக்கை பதிவு என்பது அது ஒவ்வொரு பார்வையாளர்களின் பார்வை பொறுத்து உள்ளது. பதிவு போடுவது அவர் அவர்கள் விருப்பம், இதில் நாம் சொல்ல என்ன இருக்கு. மொக்கை பதிவை ரசிக்கவும் ஆட்கள் இருக்காங்களே. நானே ஒரு மொக்கை தானே! எல்லாரும் சீரியஸ் பதிவுகள் போட ஆரம்பித்து விட்டால் போர் அடிக்கும் பாருங்க.

அனானிகளை பற்றி சொல்ல ஒன்னும் இல்லை. சில சமயங்களில் அவர்கள் கமெண்ட் ரொம்ப அருமையாக இருக்கும். "அட" போட வைக்கும் ஆனால் இதையே அவர்களின் பெயர் போட்டு போட்டால் இன்னும் அருமையாக இருக்கும் என்பது என் எண்ணம். நான் அனானி ஆட்டங்களில் கலந்து கொண்டது இல்லை.

கவிதா:- தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆன தகுதிகள் என்ன என்ன வேண்டும்?

இதை நீங்க விடவே மாட்டேன், அடம் பண்ணுறீங்களே... உங்களை சீக்கிரம் ஸ்டார் ஆக்க நான் பரிந்துரை செய்யுறேங்க போதுமா?
மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது, தொடர்ந்து எழுதுங்கள். எல்லா பதிவுகளுக்கும் சென்று முடிந்த அளவு சென்று விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். அவர்களே உங்களை ஒரு நாள் ஸ்டார் ஆக்குவார்கள். ஆனால் நிலைமை தற்பொழுது அப்படி இல்லை என்று தான் எனக்குப்படுகின்றது.

கவிதா:- மொழி’ (திரைப்படம் இல்லை) பற்றிய உங்களின் சிந்தனை மிக குறுகியதாக இருக்கிறது என நினைக்கிறேன். தமிழ் நாட்டை தவர இந்தி, பிற மாநிலங்களில் ஒரு பாடமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் நாம் தான் இந்திய மொழிகளில் பொது மொழியாக உள்ள இந்தியை படிக்காமல், அடுத்த நாட்டுகாரின் மொழியான ஆங்கிலத்தை படித்து அதை வைத்து பிற மாநிலங்களிலும், பிற நாட்டிலும் காலம் கடத்துகிறோம். இது சரியா? இந்திய மொழியான இந்தியை நாம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு?.

உண்மை, ரொம்பவே குறுகியது தான். காரணம் பெரிசா ஏதும் இல்லை, ஆர்வம் இல்லை, அம்புட்டு தான். ஆனால் எனக்கு இந்தி தெரியாது என்பதை என் பலவீனமாக காட்ட முற்பட்டால் அதற்கு நான் ஆள் கிடையாது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அப்படினு ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கும் முயற்சி ரொம்ப நல்லாவே நடக்குது, இது தான் உண்மை என்று எண்ணம் ஏற்கனவே பெரும்பாலான வட இந்தியர்களுக்கு வந்து விட்டது. ஆனால் என்னை யார் கேட்டாலும் சலிக்காமல் அது உண்மை இல்லை என்று சொல்லுவேன். நீங்க எதை வைத்து பொதுவான மொழி என்று சொல்லுறீங்க, பொதுவாக ஆக்க முயற்சி எடுக்கும் மொழியாக வேண்டுமனால் கூறுங்கள். ஒரு மொழி வளர அடுத்த மொழியை அழிக்க கூடாது, ஆனால் இந்தியின் வளர்ச்சியை எடுத்துப் பார்த்தால் அதனால் அழிவுண்ட, அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கும் மொழிகள் அனேகம். இந்தியை தமிழகத்தில் எதிர்க்க காரணம், அந்த மொழியை செலுத்த முயலாமல், திணிக்க முயன்றது தான். திணிக்க முயன்றால் திமிற தான் தோன்றும், அது தான் நடந்து உள்ளது நம் தமிழகத்தில். பின் இதை அரசியல் ஆக்கி ஒரு விளையாட்டு விளையாடி விட்டார்கள் நம் வியாதிகள்.

வெள்ளைக்காரன் விட்டு போன கட்டமைப்பு போன்ற பலவற்றை பயன்படுத்தும் போது அந்நிய தேசத்தவரால் உருவாக்கப்பட்டதை நாம் உபயோகப்படுத்துகிறோமே என்று நினைத்தது உண்டா? அது போல தாங்க இதுவும். அந்த மொழியின் தேவை நமக்கு இருந்தது, தொடர்ந்து உபயோகப்படுத்துகிறோம். அவ்வளவு தான். அதும் இல்லாமல் ஆங்கிலத்தை வைத்து எல்லா நாட்டிலும் காலம் தள்ள முடியாது, ஆங்கிலமே புரியாத பல நாட்டு மக்கள் இருக்கிறார்கள். அங்க எல்லாம் நமக்கு சைக்கை பாஷை தான்.

கவிதா:- மனிதர்களை கடவுளாக ஆக்கும் நம்மை பற்றி- (நடிகர்கள், அரசியல் தலைவர், தலைவிகள், சாமியார்கள்..)

எனக்கு நம்பிக்கை இல்லை, நம்பிக்கை உள்ளவர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.சொல்லி தான் ஆகனும் என்றால் - " போய் புள்ளக் குட்டிகளை படிக்க வைங்கய்யா..." (அது சாமியார்களுக்கு).

கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரையே கடவுளாக கும்பிடும் பகுத்தறிவு கூட்டத்தில் இருந்து வந்தவன் தான் நானும், ப்ரீயா விடுங்க.... ஆனால் என் லிஸ்டல நடிகர்கள், இன்றைய அரசியல் தலைவர்கள், தலைவிகள் சத்தியமா இல்லை. நான் சில இடங்களில் ரஜினியை தலைவர் என்று வளித்து இருக்கலாம், அது ஒரு ரசிகன் என்ற முறையில் மட்டுமே அவரை பின்பற்றுபவன் என்று இல்லை.

கவிதா:- சூடானில் பிடித்தது, நாமும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தது-

இது வரை அப்படி ஏதும் தோன்றியது இல்லை. எப்படி எல்லாம் இருக்க கூடாது என்ற நினைத்த விசயங்கள் பல இருக்கு.

கவிதா:- வவாச’ வில் உங்களின் பங்களிப்பும், அதனால் உங்களுக்கு ஏற்படும் பயணும் என்ன?

பெரிதாக ஒன்றும் இல்லை.
சங்கத்து சிங்கங்களில் ஒருவன் என்று சொன்னால் பதிவுலகில் அனைவருக்கும் தெரியும்படியான விளம்பரம், அன்பான, பண்பான நண்பர்கள்.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு

கட்டி வச்சு வேற அடிப்பீங்களா, தாங்குவேனா?

1. பிடித்த பெண் பதிவர்கள்

ஒரு லிஸ்டே இருக்கு, அவை எல்லாம் நான் படிக்கும் பெண் பதிவர்கள். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ரசிக்க வைத்து உள்ளார்கள்.(தோடா, சினிமா ஹிரோயின் பேட்டி மாதிரி பதில் சொல்ல வேண்டியாதா இருக்கு, என்ன பண்றது, இல்லாட்டி வம்பாயிடுமே)

2. உங்களின் ‘அப்பா” என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது

எளிமை, பிடிவாதம், கோவம், அமைதி

3. உங்களுக்கு பிடித்த உங்களின் பதிவுகள்

எல்லாமே நான் பெற்றெடுத்த முத்துக்கள் தானே என்று சத்தியமா சொல்ல மாட்டேன். ஒசியில விளம்பரம் கொடுக்க சொல்லுறீங்க, விடுவேனா, இதோ

தேசியம் - http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_15.html
அறிவியல் - http://tsivaram.blogspot.com/2006/11/1.html
அழகுக்கு - http://tsivaram.blogspot.com/2006/11/blog-post.html
மொக்கைக்கு -http://tsivaram.blogspot.com/2006/07/blog-post_20.html
சுவைக்கு - http://tsivaram.blogspot.com/2006/11/blog-post_02.html
பக்தி - http://tsivaram.blogspot.com/2006/11/blog-post_04.html
சந்து கேப்ல சிந்து பாடுறது - http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_24.html
குசும்புக்கு - http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_07.html,
நக்கலுக்கு - http://tsivaram.blogspot.com/2006/10/blog-post_09.html,
கோபத்திற்கு - http://tsivaram.blogspot.com/2006/05/blog-post.html
லொள்ளுக்கு - http://tsivaram.blogspot.com/2007/02/blog-post_20.html

4. பதிவுலகில் கற்றுக்கொண்டவை

எங்கு போனாலும் நாம் திருந்த மாட்டோம், அது போக, தமிழில் சரளமாக டைப் பண்ண, பலவற்றை தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வைத்தது, யோசிக்க வைத்தது.

5. உங்களின் தோழி’கள் பற்றி

உரிமையுடன் கடிந்து கொள்பவர்கள், எதையும் பகிர்ந்து கொள்பவர்கள், என் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள், எனக்காக பலவற்றை செய்தவர்கள், செய்பவர்கள்.

6. வ.வா.ச சிங்கங்களை வரிசைப்படுத்துங்கள்

ஆங்கில அகர வரிசைப்படி

சொந்த பெயர்
பாலாஜி
தேவ்
இளா
சிபி
மோகன்
பாண்டி
ராம்
சிவா

புனை பெயர்
கச்சேரி தேவ்
ஜொள்ளு பாண்டி
கைப்புள்ள மோகன்
நாகை சிவா
ராயல் ராம்
தளபதி சிபி
வெட்டி பாலாஜி
விவசாயி இளா

வார்த்தைகளில்,
பாலாஜி - சுட்டிப்பயல்,
தேவ் - பக்குவமான ஒருங்கிணைப்பாளர்,
இளா - இன்"சீனியர்",
மோகன் - மெத்த படித்த மேதை,
பாண்டி - எனக்காக ஸ்கூல்களை விட்டு கொடுத்து கல்லூரி வாசலுக்கு மாறிய பண்பாளர்,
சிபி - லொள்ளாணந்தா,
ராம் - சிணுங்கும் மதுரை தங்கம்.

7. உங்கள் சமையலில் உங்களுக்கு பிடித்தது /மற்றவர்களுக்கு பிடித்ததும் சொல்லலாம்

எனக்கு பிடித்தது இறா வறுவல், சிக்கன் 65, உ.கி. பொடிமாஸ், ரசம் இப்படினு சொல்லிக்கிட்டே போகலாம்.

மற்றவர்களுக்கு - இந்தியாவில் நான் சிக்கன் 65வும், இறாலும் தான் செய்வேன். இங்கன எதை சமைத்து போட்டாலும் கண்ணீர் மல்க(காரத்தினால்) நல்லா இருக்குனு சொல்லுறாங்க, ரொம்ப காய்ந்து போய் கிடக்குறாங்க போல. அதிலும் முட்டை குழம்பு, சாம்பார்னா பாத்திரத்தை மண்டிட்டு தான் மறு வேலை பாக்குறாங்க.

8. சாப்பாட்டை தவிர, வேறு எந்த விஷயங்களுக்கு, உங்கள் அம்மாவின் அருகாமை வேண்டும் என நினைப்பீர்கள்

திட்டுவதற்கு, மடியில் தலை வைத்து படுக்க, டிவி சீரியல்களை மாற்ற சண்டை போடுவதற்கு...

9. கலாம் அவர்களின் - பொன்மொழிகளில் உங்களுக்கு பிடித்தது

அவரின் பொன்மொழிகள் அனைத்தையும் நான் படித்தது இல்லை. அக்னி சிறகுகளில் இருந்து சில வைர வரிகளை வைத்து ஒரு பதிவு போட்டு இருக்கேன், அது http://tsivaram.blogspot.com/2006/11/blog-post.html

*** படித்த வரையில் தோல்விகளுக்கிடையே தான் வெற்றி இருக்கிறது.
குழப்பங்களுக்கிடையே தான் நம்பிக்கை இருக்கிறது.
பிரச்சனைகளுக்கிடையே தான் சத்தியம் இருக்கிறது.

*** எதை செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு, அதில் உங்களின் அதிகபட்ச ஆர்வத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துங்கள். அது உங்களைச் சுற்றி அன்பையும், மகிழ்ச்சியையும் பரவச் செய்யும்.

10. ஜார்ஜ் புஷ்- ஐ நேராக பார்க்க நேர்ந்தால் என்ன கேட்க நினைப்பீர்கள்.?

கடன் கூட கேட்கலாம், ஆனா அதை விட முக்கியமான விசயம் இருப்பதால்,

உங்க பொண்ணுக்கு எப்ப மாப்பிள்ளை பாக்க போறீங்க?

இப்பனா நான் ரெடி
கொஞ்சம் லேட்டானா வெட்டி ரெடி
ரொம்ப லேட்டான பங்காளி ஷாம் ரெடி
கொஞ்சம் கன்சீடர் பண்ணுங்கனு கேட்ப்பேன்.

அட என்னங்க நீங்க, அவரு போய் நான் பாப்பதா, அந்த அளவுக்கு நான் இன்னும் மோசம் ஆகல, நாங்க எல்லாம் பாக்கெட்டில் நாலணா இருந்தாலே பெரிய ரவுடி, எங்கிட்ட போய்... போங்க போய் பொழப்ப பாருங்க....

கவிதா..! - இந்த கேத்து தான் ஆம்பிளைங்க சொத்தே!!!!!