சென்னைக்கு நாங்கள் வந்து சரியாக 15 வருடங்கள் ஆகின்றன.. சென்னை பழக்கவழக்கங்களை, நாகரீகத்தை நன்றாக பழகிக்கொண்ட நல்ல குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. அது என்ன நல்ல பழக்கவழக்கங்கள் என கேட்கிறீர்களா?.. இதோ...:-

1. பூட்டிய கதவை உயிரே போனாலும் திறந்து வைப்பது இல்லை

2. வீட்டில் உயிருடன் யாராவது இருக்கிறார்களா இல்லையா என்று அடுத்த வீட்டுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுதல்.

3. பக்கத்து வீட்டுக்காரர்களை வழியில் பார்த்தால் ஒரே ஒரு “புன்னகை” மட்டுமே அதற்கு மேல் பேசுவது நாகரீகம் இல்லை என்பதைவிட..அவர்கள் நம்மிடம் உதவி கேட்டுவிட போகிறார்களோ என்று ஒருவித உஷாருடன் எப்போதும் இருக்கவேண்டும்.

4. அந்நியர் யாரையாவது பார்த்தால்..-அவர் யார்?, எந்த வீட்டுக்கு சொந்தக்காரர், விற்பனையாளரா? கொரியர்க்காரா? இல்லை திருட வந்தவரா? எதற்கு வீண் பிரச்சனை? என்று கண்டும் காணாமல் சென்றுவிடுவது

5. தெருவில் குப்பை எடுத்து செல்ல ஒருவர் வந்தாலும், அதை அவரிடம் சரியாக கொடுக்காமல், தெருவில் தூக்கிப்போட்டு அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்க வைக்க வேண்டும்..

6. பக்கத்துவீட்டில் போட்ட பால் பாக்கெட் உடைந்து பால் வெளியில் கொட்டி கிடந்தாலும், நமக்கென்ன என்று நம் வீட்டு பால் பாக்கெட்டை மட்டும் எடுத்து வந்து விடுவது.

7. பக்கத்து வீட்டில் இடியே விழுகின்ற சத்தம் கேட்டாலும் என்னவென்று கேட்க்காமல் காதை மூடிக்கொண்டு பேசாமல் நம் வீட்டு டிவியை பார்த்து கொண்டு இருப்பது. ஆனால் 2 மாதம் கழித்து கண்டிப்பாக, அவர்களை வழியில் பார்க்கும் போதும், “அன்றைக்கு உங்களது வீட்டில் இடி விழுகின்ற சத்தம் கேட்டதே..அது எனக்கும் கேட்டது, நான் தான் எதற்கு உங்கள் வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டேன்” என்று சொல்லவேண்டும்.

8. அடுத்த வீட்டு குழந்தைகளை நம் வீட்டினுள் சேர்த்து வைத்து விளையாடாமல் இருக்க நம் குழந்தைக்கு உபதேசம் செய்து, வெளியில் போய் விளையாட சொல்லவேண்டும், அதே போல் வேற்று குழந்தைகள் எதிரில் நம் குழந்தை fridge ல் நம் குழந்தைக்காக வைத்துள்ள சாக்லெட், பிஸ்கட் எடுத்து சாப்பிடாமல் இருக்க கற்றுக்கொடுக்கவேண்டும். (காசு கொடுத்து நம் குழந்தைக்கு வாங்கி வைத்தது அல்லவா)

9. அப்படியே நம் குழந்தையோடு மற்ற வீட்டு குழந்தைகள் விளையாடினாலும், நம் வீட்டு சோபா, கட்டில், விளையாட்டு பொருட்களை தொடாமல் பார்த்துக்கொள்ள நம் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டும். (பொருட்கள் வீணாகி விடுமல்லவா)

10. எந்தவித பிரச்சனை வந்தாலும், நமக்கு மட்டும் பிரச்சனை வராதவாறு எப்போதும் பார்த்துகொள்ளவேண்டும். அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன?

அணில் குட்டி அனிதா:- ம்ம்.. ஆமா..கவிதா இதுல கொழந்த கொழந்த ன்னு சொல்றீங்களே அது யாரை?? நீங்க ஒன்னு பெத்து போட்டு வச்சி இருக்கீங்களே அதையா?.. அது கொழந்தையே இல்லையே?!! ம்ம்..சரி சரி.. கண்ணை உருட்டாதீங்க….காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. என்ன செய்றது.. என் தல எழுத்து இதை எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு.....


பீட்டர் தாத்ஸ் :- Faith makes all things possible. Hope makes all things bright.